வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Caston
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (12:43 IST)

பசங்க 2 சூப்பர் கிட்ஸை பற்றியது - பாண்டிராஜ் பேட்டி

பசங்க படத்தின் மூலம் இயக்குனரான பாண்டிராஜ் அதேபோல் ஒரு படத்தை பிறகு எடுக்கவில்லை என்ற வருத்தம் பலருக்கும் உள்ளது.


 


கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற கமர்ஷியல் பாதையில் அவரும் பயணிக்கிறார் என்று வெளிப்படையாகவே பலரும் குறைபட்டுக் கொண்டனர். இந்நிலையில், அந்த விமர்சனத்தின் வாயை அடைப்பது போல் பசங்க 2 படத்தை இயக்கியிருக்கிறார். படம் குறித்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
பசங்க படத்துக்குப் பிறகு அது போன்ற ஒரு படத்தை எடுக்க ஏன் இவ்வளவு காலதாமதம்?
 
பசங்க 2 படத்திற்கான கதை, வம்சம் திரைப்படம் முடிந்தபொழுதே கிடைத்து விட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது. அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும்.
 
அப்படி என்ன கதை?
 
பசங்க 2 எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகளை பற்றிய கதை. இவர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கிடையாது. இவர்கள் சூப்பர் கிட்ஸ். அதீத புத்திசாலிகள் என்றும் சொல்லலாம்.
 
இந்த கதைக்காக என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொண்டீர்கள்?
 
இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது.
 
இந்த காலகட்டத்தில் தான் கேடி பில்லா கில்லாடி ரங்காவை இயக்கினீர்கள் இல்லையா?
 
பசங்க 2 படத்துக்கான ஆய்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தையும் இயக்கினேன்.
 
இந்த குழந்தைகளை ஏன் சூப்பர் கிட்ஸ் என்கிறீர்கள்?
 
சாதாரணமாக மனிதனின் ஐக்யூ 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு ஐக்யூ 120, 130 இருக்கும்.
 
இந்தப் படத்தை இயக்க உங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது எது?
 
இந்த கதையை படமாக்குவது என்றதும், இதுபோன்ற படங்கள் வந்திருக்கிறதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் வரவில்லை.  மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதேபோல் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இதில் குழந்தைகள் மிகவும் ஜாலியாக வந்து லூட்டி அடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள். ஆனால் இந்த படத்தில் எந்தவிதமான காதல் காட்சிகளும் இடம்பெறாது.
 
இதில் சூர்யாவுக்கு என்ன வேடம்?
 
சூர்யா ஒரு குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார். அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும்படியாக தான் இருக்கும்.
 
சூர்யாவுக்காக கதையில் மாற்றம் செய்தீர்களா?
 
இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம். சூர்யா, அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.