சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் நாயகியாக நடித்து, தெலுங்கில் தானொரு டாப் நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் குறித்து அவர் அளித்த சுவாரஸியமான பேட்டி உங்களுக்காக...
சினிமா வாழ்க்கை எப்படி போகிறது?
என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன பிறகும் படங்கள் குறையவில்லை. படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
திருமணம் எப்போது?
என்னை சந்திக்கிற யாராக இருந்தாலும், உங்களுக்கு திருமணம் எப்போது என்றுதான் கேட்கிறார்கள்.
ஏன் திருமணத்தில் விருப்பம் இல்லையா?
யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டால் பரவாயில்லை. ஆனால் திருமணம் பற்றியே பேசுகிறார்கள். எனக்கு திருமணம் குறித்து சிந்திக்கவே நேரம் இல்லை.
சரி, யாரையாவது காதலிக்கிறீர்களா?
இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. அதற்கு நேரம் அமைய வேண்டும்.
அப்படியானால் காதலித்துதான் திருமணம் செய்வீர்களா?
இல்லை. பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறேன்.
சிரஞ்சீவியுடனும் நடிக்கிறீர்கள், அவ்வப்போது ஒரு பாடலுக்கும் ஆடுகிறீர்கள்...?
ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் தவறு இல்லை. எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். பெரிய கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தால் மறுக்க மாட்டேன்.
புதிதாக என்னென்ன படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறீர்கள்?
தெலுங்கில் ராணாவுடனும் தமிழில் விஜய்யுடனும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அஜித்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். இனி எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல கதைகளாகவும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. இனிமேலும் எனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.
சிரஞ்சீவியின் 150 -வது படத்தில் நடித்தது?
சிரஞ்சீவி படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடைய குடும்பத்தை சேர்ந்த ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் ஆகியோருடன் ஏற்கனவே நடித்து இருக்கிறேன்.
சிரஞ்சீவியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
சிரஞ்சீவி நன்றாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் இணைந்து ஆடுவது பெரிய சவாலாக இருந்தது. எனக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் சிரஞ்சீவி என்பேன். அந்த அளவுக்கு எனது மனதில் பதிந்து விட்டார். பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடியவர்.