1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:29 IST)

ஸ்டார் வேல்யூவுக்காக நடிப்பதில்லை - சுதீப் பேட்டி

ஸ்டார் வேல்யூவுக்காக நடிப்பதில்லை - சுதீப் பேட்டி

கன்னடம் தாய் மெழி என்றாலும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சுதீப் பிரபலம். இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளார்.


 


அந்தவகையில் அங்கும் பிரபலம். தமிழில் அவர் நாயகனாக நடித்துள்ள படம், முடிஞ்சா இவன புடி. கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் குறித்து எதிர்பார்ப்புடன் பேசுகிறார் சுதீப்.
 
சென்னை எப்படியிருக்கு?
 
சென்னைக்கு நான் புதுசு கிடையாது. படப்பிடிப்புக்காக பலமுறை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தமிழ் திரையுலகினர் காட்டிய அன்புக்கு நன்றி என்பது சிறிய வார்த்தை. 
 
தென்னிந்தியா அறியும் ஸ்டாராக பரிணமித்திருப்பது பற்றி...?
 
ஸ்டார் வேல்யூ குறித்து பலரும் பேசினார்கள். ஆனால், அதனை மனதில் வைத்து நான் சினிமாவில் நடிப்பதில்லை. பெரிய நடிகனாக வேண்டும் என்று நான் சினிமாவுக்கு வரவில்லை.
 
பிறகு...?
 
எனக்கு சினிமா பிடிக்கும். எந்தவகையிலாவது கடைசிவரை சினிமாவோடு தொடர்புப்படுத்தியிருக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். அடுத்து என்ன என்று யோசிப்பதில்லை. அப்படி யோசிக்கும் போதெல்லாம் பக்கத்து மாநிலங்களிலிருந்து, இங்கே உங்களுக்கு வேலை இருக்கு என்று நண்பர்கள் அழைக்கிறார்கள்.
 
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்திருப்பது பற்றி...?
 
ஜாம்பவான்களை வைத்து இயக்கியவர் இந்தப் படத்தில் என்னை இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், அவர் எனக்காக எழுதியிருப்பதை சரியாக பண்ணிவிட வேண்டும் என்று நினைப்பேன். அவர் ஒரு யதார்த்தமான இயக்குனர். 
 
புதுப்படங்களில் நடிக்கையில் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
 
ஒவ்வொரு புதுப்படமும் ஒரு அத்தியாயம் போலத்தான். இன்டஸ்ட்ரியில் சின்னதாக ஒரு பெயரை எடுத்திருக்கிறேன். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
 
தமிழில் நடித்திருப்பது...?
 
நான் பார்த்து ரசித்து வளர்ந்த தமிழில் நடித்திருக்கிறேன், ரொம்பவும் சந்தோஷம்.