1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2016 (10:53 IST)

மலையாளத்தில் ஏமாற்றிவிட்டார்கள் - பூர்ணா பேட்டி

மலையாளத்தில் ஏமாற்றிவிட்டார்கள் - பூர்ணா பேட்டி

மலையாளத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் நடிகை பூர்ணா. பொதுவாக நடிகைகள், மலையாளத்தில் நல்ல வேடங்கள் அமைகிறது என்பார்கள்.


 


பூர்ணாவின் ஸ்டேட்மெண்ட் வேறு விதமாக உள்ளது. தான் ஏமாற்றப்பட்டதையும், திருமணம் குறித்தும் பூர்ணா பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
 
மலையாள சினிமா உங்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகிறீர்களே...?
 
நான் முதலில் மலையாளப் படத்தில்தான் அறிமுகமானேன். அங்கு வாய்ப்பு தரும்போதெல்லாம் நல்ல வேடம் என்பார்கள். ஆனால், அது அப்படி இருக்காது.
 
அதனை கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா? 
 
நல்ல வேடம், முக்கியமான கதாபாத்திரம் என்று ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால், அப்படியிருக்காது. சின்ன வேடமாக முக்கியத்துவம் இல்லாததாக இருக்கும். நம்பி கையெழுத்து போடும் என்னை சின்னச் சின்ன வேடங்கள் தந்து ஏமாற்றினார்கள். பலமுறை அவர்களிடம் ஏமாந்து போனேன்.
 
தமிழ், தெலுங்கில் அப்படியான அனுபவங்கள் ஏற்பட்டதா?
 
தமிழ், தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த பிறகே நல்ல வேடங்கள் எனக்கு அமைந்தன. தொடர்ந்து நல்ல வேடங்களில் நடித்து வருகிறேன்.
 
தெலுங்கில் நீங்கள் நடித்த படம் ஒன்று சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியதே...?
 
அது பேய் படம். அந்தப் படத்தைப் பார்த்த ஒருவர் இறந்துவிட்டதாக புரளி கிளப்பினார்கள். ஆனால், அது உண்மையில்லை புரளிதான்.
 
தமிழில் உங்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?
 
மனதுக்குப் பிடித்த வேடங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். எல்லா படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை.
 
திருமணம்...?
 
இந்த வருடம் என்னுடைய திருமணத்தை நடத்த பெற்றோர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்?
 
உங்கள் கணவராக வருகிறவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
 
என்னையும், என் குடும்பத்தையும் நேசிக்கும் ஒருவர்தான் எனக்கு கணவராக வரவேண்டும். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.