வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : புதன், 27 ஆகஸ்ட் 2014 (12:02 IST)

நயன்தாரா கண்கலங்கியது உண்மைதான் - ஆர்யா

ஆர்யா தான் நடித்த படங்களின் மீதுகூட இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்கமாட்டார். அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் அமரகாவியம் படத்தைப் பற்றி வாய் வலிக்க பேசிக் கொண்டிருக்கிறார். தனது தயாரிப்பு என்பதனால் மட்டுமில்லை. படத்தில் நடித்திருப்பது ஆர்யாவின் தம்பி சத்யா. படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் ஆர்யா பகிர்ந்து கொண்டார்.
ஆர்யா படித்துறை என்ற படத்தை தயாரித்தாலும் அது முழுமையடையவில்லை. அந்தவகையில் அமரகாவியம் தயாரிப்பாளராக அவருக்கு முதல் படம். முதல் படம் என்ற போதிலும் ஷுட்டிங் ஸ்பாட் பக்கம் அவர் தலைகாட்டவில்லையாம், ஏன்?
 
அமரகாவியத்தில் நடித்தது என் தம்பி. இயக்கியது என் நண்பர் ஜீவா சங்கர். இரண்டு பேருமே எதையும் சரியாக செய்யக் கூடியவர்கள். அந்த நம்பிக்கையில்தான் நான் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போகவில்லை. ஒரு புரொடியூசராக அவர்கள் கேட்ட போதெல்லாம் பணம் தந்தேன். நான் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.
 

ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு நடிப்பாசை காட்டியதே ஜீவா சங்கர்தானாம். எப்படி?
 
என் தம்பி காலேஜ் போய்கிட்டிருக்கும் போது ஒருநாள் ஜீவா சங்கர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது, இவனையும் நடிக்க வைக்கலாமே என்று சத்யாவின் காதுபடவே கூறினார். அன்றிலிருந்து, நானும் நடிப்பேன்னு தொல்லை பண்ண ஆரம்பிச்சிட்டான். அதோடு படிப்பிலும் இன்ட்ரஸ்ட் இல்லாமல் போயிடுச்சி. சினிமா ஆசை காட்டி என் தம்பியை கெடுத்திட்டியே என்று ஜீவா சங்கரை திட்டியிருக்கேன். ஆனால் இன்று நானே ஆச்சரியப்படுகிற வகையில் சத்யாவை நடிக்க வச்சிருக்கார்.
சொந்த படம் என்றால் செலவை சுருக்குவதுதான் நடிகர்கள் செய்யும் முதல் வேலை. ஆர்யா எப்படி?
 
என் தம்பிக்கு பெரிய வியாபாரம் இல்லை என்ற போதும் அதிக பட்ஜெட்டில்தான் படத்தை தயாரித்திருக்கிறேன். தேவையான செலவுகள் செய்தால்தான் படத்தை சொன்னபடி எடுக்க முடியும் என்று இயக்குனரும் கூறியிருந்தார். அவர் கேட்டபடி செலவு செய்திருக்கிறேன்.
 

என்னதான் தம்பி என்றாலும் பைனல் அவுட்ஃபுட் மகிழ்ச்சியையும், நிறைவையும் தந்தால் மட்டுமே ஒரு தயாரிப்பாளராக சந்தோஷப்பட முடியும். அமரகாவியம் ஆர்யாவுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறதா?
 
ஜீவா சங்கரின் நான் படம் சிறப்பாக இருந்தது. அதைவிட சிறப்பாக இந்தப் படத்தை எடுத்திருக்கார். சின்னச் சின்ன காதல் உணர்வுகளை அற்புதமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படத்தில் என் தம்பியும் முன்னைவிட நடிகராக ஜொலித்துள்ளார். அவரது நடிப்பைப் பார்த்து பல இடங்களில் நானே வியந்தேன். ஒரு நல்ல படத்தை தயாரித்த சந்தோஷம் இருக்கிறது.
 

அமரகாவியத்தைப் பார்த்து நயன்தாரா அழுததுதான் இப்போது ஹாட் நியூஸ். இது நயன்தாராவின் கதை என்ற பேச்சும் உள்ளது. ஆர்யா என்ன சொல்கிறார்?
 
நயன்தாரா படத்தைப் பார்த்து கண் கலங்கியது உண்மைதான்.

படம் தன்னை டிஸ்டர்ப் செய்ததாக என்னிடம் கூறினார். ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் நயன்தாராவின் சொந்த வாழ்க்கையில் நடந்தது போல் இருந்ததாக நயன்தாராவே கூறியதாக பத்திரிகைகளில் வேறு மாதிரி செய்தி வெளியாகிவிட்டது.