செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 12 பிப்ரவரி 2015 (09:18 IST)

காதல் பிரேக்கப்பாகி அழுதேன் - நடிகை பிந்து மாதவி

நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியாளாக வந்திறங்கிய போது பிந்து மாதவிக்கு சென்னையில் யாரையும் தெரியாதாம். லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வாய்ப்பு வேட்டையாடி இப்போது தமிழின் அறியப்படுகிற நடிகைகளில் ஒருவராக வளர்ந்திருப்பது ஆச்சரியப்படுத்துகிற சாதனை. 
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிந்து மாதவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் உங்களுக்காக.
 
ரொம்ப குறைவாகவே நடிக்கிறீர்கள்?
 
சென்ற வருடம் என்னுடைய நடிப்பில் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் மட்டும்தான் வெளியானது. ஆனால் இந்த வருடம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், சவாலே சமாளி மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் என மூன்று படங்கள் வெளிவருகின்றன.
 
ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
 
கதை பிடித்திருந்தால் நடிக்கிறேன். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் இயக்குனர் ராம் என்னிடம் சொன்ன கதை ரொம்பவே பிடித்திருந்தது. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.
 
கனவு வேடம் என்று ஏதாவது உள்ளதா?
 
அம்மன் போன்ற தெய்வீக வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. வேண்டுமானால் அதை எனது கனவு வேடம் என்று சொல்லலாம்.
 
இப்போது நன்கு படித்தவர்கள் சினிமாவில் நடிக்க வருகிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து?
 
படித்தவர்கள் ஹீரோயினாவது வரவேற்கத்தக்க விஷயம். அதேநேரம் 13, 14 வயதில் நடிக்க வருவது தவறான விஷயம். இருபது இருபத்தியிரண்டு வயதுக்கு மேல் சினிமாவில் நடிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

அடுத்து யார் யாருடன் நடிக்கப் போகிறீர்கள்?
 
எதிர்காலத்தில் யாருடன் நடிக்கப் போகிறேன் என்று தெரியாது. ஆனால், அஜீத்துடன் நடித்துவிட வேண்டும் என்பது என்னுடைய சினிமா கனவு. 
அஜீத்துடன் ஏன்...? நன்றாக பிரியாணி சமைப்பார் என்பதற்காகவா? 
 
பிரியாணியும் ஒரு காரணம். 
 
ஆர்யாவும் பிரியாணி விஷயத்தில் கில்லாடியாயிற்றே...?
 
ஆர்யாவின் பிரியாணி வேண்டாம். அஜீத் பிரியாணி போதும். தமிழ் ஹீரோக்களிலேயே மிகவும் அழகானவர் அஜீத்தான்.
 
காதலித்த அனுபவம்...?
 
கல்லூரியில் படிக்கையில் ஒருவரை காதலித்தேன். ஆனால் அது பிரேக்கப்பாகிவிட்டது. நான்கு ஐந்து மாதம் அழுது கொண்டிருந்தேன். அந்த துயரத்திலிருந்து வெளியேவர எனக்கு ஆறு மாதங்களானது. இப்போது யாரையும் காதலிக்கவில்லை.
 
இப்போதுள்ள புதுமுக நடிகைகளில் யாரை பிடிக்கும்?
 
லட்சுமி மேனன் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார். நன்றாக நடிக்கிறார். அவர் நடித்த எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன்.