1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜனவரி 2016 (11:11 IST)

10 ஆண்டுகளுக்குப் பின்: சொந்த மண்ணில் சம்பூர் மக்களின் தைப்பொங்கல்

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் மீளக்குடியேறியுள்ள மக்கள் 10 ஆண்டுகளின் பின்னர் தங்களின் சொந்த மண்ணில் பொங்கல் பொங்கி தைப் பொங்கல் நாளைக் கொண்டாடினார்கள்.

நெல் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் தமது பிரதான வாழ்வாதாரமாக கொண்டிருந்த இந்தக் குடும்பங்கள் யுத்த சூழ்நிலை காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் சம்பூர் பிரதேசத்திலுள்ள காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவும் பொருளாதார வலயமாகவும் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்தக் குடும்பங்களின் மீள் குடியேற்றம் தடைப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தை அடுத்து கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்குரிய காணிகள் மீளக் கையளிக்கப்பட்டிருந்தன.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று தங்களின் சொந்த மண்ணில் பொங்கல் நாளைக் கொண்டாடிய சம்பூர் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மீளக்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினாலும் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களிடம் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை என்கிறார் அந்த பிரதேசத்தை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் .

அந்தக் குடும்பங்களின் குடியிருப்பு பகுதியிலுள்ள கடற்படை பயிற்சி முகாமை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களினாலே அவர்களின் மீள்குடியேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருந்த போதிலும் அடுத்த இரண்டு மாதங்களில் கடற்படை முகாம் அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று காணிக்கு மாற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு அந்த மக்களிடம் இருப்பதாகவும் நாகேஸ்வரன் தெரிவித்தார்.