1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2015 (17:22 IST)

வடமாகாணத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்: மைத்திரிபால சிறிசேன கவலை

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிக அளவில் மது அருந்தப்படுவதாகவும் இதனால், மதுபான விற்பனையின் மூலம் அங்கிருந்து அதிக அளவிலான வரிப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
 
தென் மாகாணத்தில் பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.
 
"எமது நாட்டில் நிலவுகின்ற மதுபான பிரச்சினையில் வடமாகாணத்தின் நிலைமையானது மிகவும் மோசமானதாக இருக்கின்றது. மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு வடக்கில் இருந்தே அதிக அளவில் பணம் செலுத்தப்படுகின்றது. மது பாவனை மட்டுமல்லாமல், அங்கு அதிகமானவர்கள் போதைப் பொருள் பாவனைக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
புங்குடு தீவு மாணவி வித்யாவின் வன்புணர்வு படுகொலை பற்றி வெளியாகியுள்ள தகவல்களைப் பார்க்கும்போது, இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் பரவியுள்ள காட்சிகள் எமது இளைஞர்களைப் பாழ் படுத்தியிருக்கின்றது என தெரியவந்திருக்கின்றது. பெற்றோர்கள் மதத்தலைவர்கள், சமூகப் பொறுப்புள்ளவர்கள் என பலரதப்பட்டவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில், 2009ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால், பியர் மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உள்ளுர் பானமாகிய கள்ளும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு 7 லட்சத்து 62 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான அளவு பியர் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டில் 40 கோடியே 57 லட்சம் லிட்டர் பியர் விற்பனையாகியிருக்கினறது.
 
அதேபோல, 2009ஆம் ஆண்டு 65 லட்சத்து 98 ஆயிரம் லிட்டர் வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது 2013ஆம் ஆண்டில் 6 கோடியே 11 லட்சத்து 32 ஆயிரம் லிட்டராக அதிகரித்திருக்கின்றது.
 
20009 ஆம் ஆண்டில் 305 கோடியே, 19 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக இருந்த கள்ளின் விற்பனை 2013ஆம் ஆண்டில் 566 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக அதிகரித்திருக்கின்றது.
 
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே நகரப்பகுதிகள் எங்கும் பல இடங்களிலும் மது விற்பனை நிலையங்கள், மது அருந்தும் இடங்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.