கேப்டன் பொறுப்பிற்கு வேறு வீரர்களை பரிந்துரை செய்தேன் - சேவாக்!
ஐபிஎல் - 7 கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு விளையாடும் விரேந்திர சேவாக் திறமையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சீசனில் நான் சரியாக விளையாடவில்லை. இந்த சீசனில் நன்றாக விளையாடினால் தேசிய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பு உருவாகும். இதனால் திறமையை நிரூபிக்க முயற்சிப்பேன். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வழிகாட்டி உத்வேகம் அளிப்பேன்.
20 ஓவர் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி உள்ளதால் பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக ஆடுவேன். பஞ்சாப் அணி நான் விரும்பினால் கேப்டன் பதவியை ஏற்கலாம் என்று தெரிவித்தது.
ஆனால் நான் கேப்டன் பதவிக்கு வேறு சில வீரர்களின் பெயர் பரிந்துரைத்தேன். என்னை ஏலம் எடுத்த பஞ்சாப் அணிக்கு சிறந்த பங்களிப்பை தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.