வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (17:24 IST)

சச்சினும், கிறிஸ் கெய்லும் ஒரே நாளில் இரட்டை சதங்கள் விளாசி அரிய சாதனை

சச்சின் டெண்டுல்கரும், கிறிஸ் கெய்லும் ஒரே நாளில், முதல் இரட்டை சதங்களை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளனர்.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15ஆவது லீக் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.
 
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்ய தீர்மாணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்தது.

 
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த போட்டியில், அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர் மழை பொழிந்தார்.  அவர் 105 பந்துகளில் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட) 100 ரன்களை எட்டினார். ஆனால் அடுத்த 100 ரன்களை வெறும் 33 பந்துகளில் எட்டினார்.
 
அவர் இந்த போட்டியில் 147 பந்துகளில் (10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் உட்பட) 215 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதன் முதலில் இரட்டை சதத்தை தொட்டவர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றார்.
 
அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகள் வரலாற்றில், முதன் முதலில் இரட்டை சதம் எடுத்தவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்தார். 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி குவாலியரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த சாதனையை படைத்தார்.
 
தற்போது அதே போன்று, தற்போது முதன் முதலில் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இரட்டை சதத்தை கிறிஸ் கெய்ல் இதே தேதியில் (2015 பிப்ரவரி 24ஆம் நாள்) பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.