1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (08:31 IST)

கடவுள் உதவி செய்தால் மிராக்கிள் நடக்கும்! பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டி

இன்று நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருப்பதால் பாகிஸ்தானின் உலகக்கோப்பை பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் கடவுள் உதவி செய்தால் மிராக்கிள் நடக்கும் என்றும் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.
 
ஆனால் யதார்த்த நிலை பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இல்லை. இன்று போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அந்த அணி முதலில் பேட் செய்து 308 ரன்கள் எடுத்து வங்கதேசத்தை 1 ரன் கூட எடுக்கவிடாமல் ஆல்- அவுட் செய்ய வேண்டும். அல்லது 350 ரன்கள் எடுத்தால் 311 ரன்கள் வித்தியாசத்திலும், 400 ரன்கள் எடுத்தால் 316 ரன்கள் வித்தியாசத்திலும் 450 ரன்கள் எடுத்தால் 321 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை டாஸ் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணிக்கு முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் அரையிறுதி வாய்ப்பு கனவாகவே போய்விடும்
 
இதுகுறித்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியபோது, 'அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இன்றைய போட்டியில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். ஆனால் அதே நேரத்தில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து எதிரணியை 50 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பது யதார்த்தமான நிலை இல்லை. ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்ததே நாங்கள் செய்த பெரிய தவறு' என்று கூறினார்.
 
பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதுபோல் இன்று மிராக்கிள் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்