செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 2 ஆகஸ்ட் 2014 (11:18 IST)

காமன்வெல்த் விளையாட்டு: வெண்கலம் வென்றார் குத்துச் சண்டை வீராங்கனை பிங்கி ஜங்ரா

மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் 51 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் பிங்கி ஜாங்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 20 ஆவது காமன்வெல்த் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை (01.08.2014) நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் அரையிறுதியில் பிங்கி ஜாங்ரா, வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை எதிர் கொண்டார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந் பிங்கி முதல் சுற்றில் ஒரு புள்ளி பின் தங்கியிருந்தார். 2 ஆவது சுற்றில் 2 புள்ளிகளும், 3 ஆவது சுற்றில் மூன்று புள்ளிகளும் பின்தங்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இது குறித்து பிங்கி ஜங்ரா கூறுகையில், "மைக்கேலா வால்ஷ் சிறந்த வீராங்கனை. இந்த ஆட்டத்தில் நான் சில தவறுகளைச் செய்தேன். வெற்றிக்கு தேவையான சிறந்த பங்களிப்பை அளித்ததாகக் கருதவில்லை.

இருப்பினும் முடிந்தவரை வெற்றிக்கு முயற்சித்தேன். என் தவறுகளைக் கண்டறிந்து, அதை சரி செய்வது குறித்து பயிற்சியாளருடன் ஆலோசித்து, அடுத்த போட்டியில் முழு வீச்சில் எழுச்சி பெறுவேன்' என்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோமை வீழ்த்தி காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றவர் பிங்கி ஜாங்ரா என்பது குறிப்பிடத்தக்கது.