1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (14:49 IST)

சிக்ஸர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல் இரட்டை சதமடித்து உலக சாதனை

இன்று நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்துள்ளார்.
 
இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15ஆவது லீக் ஆட்டம் கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.
 
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்ய தீர்மாணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் மிடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்துள்ளது.

 
இந்த போட்டியில், அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர் மழை பொழிந்தார்.  அவர் 105 பந்துகளில் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட) 100 ரன்களை எட்டினார். ஆனால் அடுத்த 100 ரன்களை வெறும் 33 பந்துகளில் எட்டினார்.
 
அவர் இந்த போட்டியில் 147 பந்துகளில் (10 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் உட்பட) 215 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார்.
 
மற்றொரு வீரர் சாமுவேல்ஸ் 156 பந்துகளில் (11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட) 133 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
 
 
இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:
 
கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்தில் 215 ரன்கள் எடுத்ததே உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும். அதே சமயம், சர்வதேச அளவில் இது மூன்றாவது அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் இந்தியாவின் ரோஹித் சர்மா 264, வீரேந்திர ஷேவாக் 119 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும்.
 

 
இரண்டாவது விக்கெட்டுக்கு கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் இணை 372 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்ட பாட்னர்ஷிப்பில் இதுவே அதிகபட்சமாகும்.

இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் இணை 318 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்துவந்தது.