வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (07:10 IST)

ஜப்பானின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது: பெல்ஜியம் அணியிடம் தோல்வி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்று வருகின்றன. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுகளில் உருகுவே, பிரான்ஸ், ரஷ்யா, குரோஷியா, ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிரேசில் அணி மெக்சிகோவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது
 
இந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி போட்டியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்ததால் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் இரு அணி வீரர்களும் சுதாரிப்பாக விளையாடியதால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. எனவே ஜப்பான் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் பெல்ஜியம் வீரர்கள் 69வது நிமிடத்தில் ஒரு கோலும், 74 நிமிடத்தில் ஒரு கோலும், கூடுதல் நிமிடமான 94வது நிமிடத்தில் ஒரு கோலும் அடுத்தடுத்து போட்டு ஜப்பானின் உலகக்கோப்பை கனவை தகர்த்தனர். இறுதியில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.