வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:42 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: 5 பதக்கங்ளைப் பெற்றது இந்தியா

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு வெண்கலப்பதக்கத்தை உறுதிசெய்து,  இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
 
17 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் கிடைத்திருந்தது.
 
இந்நிலையில் செப், 21 ( நேற்று ) இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தென்கொரியா 1,744 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றது.
 
ஜிதுராய் (585 புள்ளி), சமரேஷ் ஜங் (580 புள்ளி), பிரகாஷ் நஞ்சப்பா (578 புள்ளி) ஆகியோர் திரட்டிய புள்ளிகள் அடிப்படையில் மொத்தம் 1,743 புள்ளிகளைப் பெற்றது இந்தியா.
 
இதில் இந்தியாவும், சீனாவும் தலா 1,743 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தைப் பிடித்தன. இதனால் யாருக்கு வெள்ளிப் பதக்கம் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
இதைத் தொடர்ந்து துல்லியமாக இலக்கை சுட்டு 10 க்கும் மேல் யார் அதிக புள்ளிகளை சேகரித்தார்கள் என்று பார்க்கப்பட்டது. இதில் சீனா 65 தடவை 10 க்கும் மேல் புள்ளிகளை பெற்றிருந்தது.
 
இதில் இந்தியா ஒரு புள்ளி குறைவாக பெற்றது. எனவே சீனாவுக்கு வெள்ளியும், இந்தியாவுக்கு வெண்கலமும் வழங்கப்பட்டது.
 
மேலும், ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் கால் இறுதியில் இந்தியாவின் தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும் செப், 21 ( நேற்று ) பலப்பரீட்சை நடத்தினர். இதில் தீபிகா பலிக்கல் 7-11, 11-9, 11-8, 15-17, 11-9 என்ற நேர்செட்டில் ஜோஷ்னாவை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். 
 
அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் தீபிகாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.