1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (16:32 IST)

இந்திய வீராங்கணை உலக சாதனை; துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

சுவீடனில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.
 

 
சுவீடன் கோப்பை கிராண்ட் பிரிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி அந்நாட்டின் சாவ்ஸ்ஜோ நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 23 வயதாகும் ஜெய்ப்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா அபாரமாக செயல்பட்டு 211.2 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையும் படைத்தார்.
 
இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை யி சிலிங் 211 புள்ளிகள் சேர்த்ததே, இந்த பிரிவில் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை அபூர்வி சண்டிலா தகர்த்து புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
 
இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட சண்டிலா, இந்த உலக சாதனையின் மூலம் தனது ஒலிம்பிக் பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளார்.