வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (09:23 IST)

உலகக்கோப்பை வரை அம்பாத்தி ராயுடுதான் –விராட் கோஹ்லி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றிபெற்றது.

யுவராஜ் சிங்கின் ஃபார்ம் அவுட்டுக்குப் பின் ஒருநாள் போட்டிகளில் 4-வது வீரராகக் களமிறங்க சரியான வீரர்கள் இன்றி இந்திய அணி தவித்து வந்தது. அஜிங்க்யா ரஹானே, மனீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் எனப் பல வீரர்களை களமிறக்கிப் பரிசோதித்தது. எல்லோருமே திறமையான வீரர்கள் என்றாலும் தொடர்ச்சியாக ரன் குவிக்காமல் அனைவரும் தடுமாறி வந்தனர்.

கேதார் ஜாதவ் ஆறாவது வீரராக விளையாடும் போது சிறப்பாக விளையாடி ரன்குவித்து வருகிறார். ரஹானே டெஸ்ட் போட்டிகள் போல ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். மனீஷ் பாண்டே தொடர்ந்து சொதப்பி அணித்தேர்வில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அம்பாத்தி ராயுடுவை கோஹ்லி நான்காவது வீரராகக் களமிறக்கி பரிசோதித்துப் பார்த்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அனிக்கெதிரான ஒருநாள் போட்டிகளில் 4வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் அம்பாத்தி ராயுடு 8 போட்டிகளில் 397 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் அணியில் தனக்கான இடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ராயுடுவைப் பற்றி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளாதவது ‘ராயுடு தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை இரணடு கைகளாலும் பிடித்துக் கொண்டுள்ளார். அவர் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடுகிறார். அவரை உலகக்கோப்பை வரை விளையாடவைத்து அவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டுமென நினைத்தோம். அவரைப் போன்ற புத்திசாலியான ஒருவர் நான்காவது வீரராக விளையாடுவது அணிக்குப் பலமே’.