வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (09:01 IST)

காசு இல்லை, காதலி இல்லை - கவலைசூழ் உலகில் சிம்பு

லைம் லைட்டில் இருக்கும் நடிகர்கள் உலகின் அத்தனை சுகபோகங்களையும் அனுபவிப்பதாக பாமர ரசிகர்களுக்கு எண்ணமிருக்கிறது.

ணத்துக்குப் பணம் சுகத்துக்கு சுகம். நினைத்ததை அடைவதற்கான பணமும், பிரபல்யமும் அவர்களுக்கு இருப்பதாக நாம் நினைப்பது சரிதானா? இனிமே இப்படிதான் படத்தின் பாடல்கள் வெளியீட்டில், பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும் தொனியில் சிம்பு சொன்னவையை தொகுத்தால் நமது நினைப்பு எவ்வளவு அபத்தமானது என்று தெரியவரும். அந்தளவுக்கு சோகமயம் சிம்புவின் வாழ்க்கை.
 

 
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இசை வெளியீட்டுக்குப் பிறகு எந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. 2 வருடம் கழித்து இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன் என்று பேச்சை ஆரம்பித்தார் சிம்பு. 
 
ஒற்றுமை
 
இனிமே இப்படித்தான் படத்தை இயக்கி இருக்கும் முருகன் மற்றும் ஆனந்த் என இருவருமே முருகானந்த் என ஒற்றுமையாக பேர் போட்டிருக்கிறார்கள். அதுவே இந்தப் படத்துக்கு வெற்றிதான் என நினைக்கிறேன். இந்த ஒற்றுமைக்காகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாகும் என நினைக்கிறேன்.
 
மன்மதனில் சந்தானம்
 
மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். இப்போது இவ்வளவு பெரிய உயரத்துக்கு போய் இருக்கிறார். சந்தானத்தை நீங்க தானே அறிமுகப்படுத்தினீங்க. இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டார் என என்னிடமே நிறைய பேர் கேட்டார்கள். அறிமுகப்படுத்தினேன் என்பதை விட அவரிடம் திறமை இருக்கிறது என்பதை முதலில் அங்கீகரித்தேன் எனலாம். அவர் பெரிய நடிகனாக வருவார் என்று அங்கீகரித்துதான் பல தடைகளைத் தாண்டி அவரை மன்மதன் படத்தில் நடிக்க வைத்தேன்.
 
எனக்கு திறமையே கிடையாது
 
நான் சந்தானத்தின் திறமையை தான் அங்கீகரித்தேன். ஆனால், எனக்கு திறமையே கிடையாது. அதை உருவாக்கிக் கொடுத்ததே எங்க அப்பா தான். இங்கு நான் நிற்பதற்கு காரணம் எங்க அப்பா தான். தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக் கொடுப்பதற்கு சில பேர் தான் இருக்கிறார்கள். சந்தானத்தின் திறமையை அங்கீகரித்தேன் என்ற விஷயத்தில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

கஷ்டமும் கடவுளும்
 
என் படங்கள் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தில் நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். நிறைய பேர் நான் ஆன்மீகத்தில் போய்விட்டதாக சொல்கிறார்கள். கடவுளைத் தேடி தானே போனே. ஃபிகரைத் தேடி போகலையே. அனைத்து மக்களுமே கஷ்டத்தை அனுபவித்து இருப்பார்கள். என்னை அனைவருமே எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தவர் என்று தான் சொல்லுவார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இந்த இரண்டரை வருடம் எனக்கு கற்றுக் கொடுத்தது.
 

 
காசும் போச்சு காதலியும் போச்சு
 
கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய்விட்டது. நான் சம்பாதித்தால் அம்மாகிட்ட தான் காசைக் கொடுப்பேன். படம் போய்விட்டது. செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்கக் கூட எனக்கு கஷ்டமாக இருந்தது. காசும் போச்சு, படமும் போச்சு. சரி நமக்காக ஒரு பெண் இருக்கிறாள் என்று அவள் இருப்பாள் என்று நினைத்தேன். அவளும் போய்விட்டாள். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதோட சிரிப்பைப் பார்த்தாவது நமது கஷ்டம் போய்விடும் என நினைத்தேன். அதுவும் இல்லாமல் என்னை கடவுள் சோதித்து விட்டார்.
 
உயிர் மட்டும்தான் மிச்சம்
 
எல்லாமே என்னைவிட்டுப் போய், உயிர் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு காரணத்துக்காக உயிர் மட்டும் இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்களை நாம் கடந்தாலும் என்னோட ரசிகர்கள் என்னைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களும் என்னோட படம் வெளியாகவில்லை என்றாலும், என்னை தூக்கி நிறுத்தினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த இரண்டு வருடத்தில் நான் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன். நமக்காக வாழுவதை விட மற்றவர்களுக்காக வாழ்ந்தால் நாம் நன்றாக இருப்போம்.
 
- இதற்குப் பிறகும் நடிகர்கள் எப்போதும் சந்தோஷக் கடலில் நீந்திக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள்...?