வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (10:19 IST)

மீஞ்சூர் கோபி - நயன்தாரா - பா.ரஞ்சித்... வெடிக்க இருக்கும் விவகாரம்

மீஞ்சூர் கோபியை நினைவிருக்கிறதா? கத்தி என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்? என்னுடைய கதை என்று பலர் பல படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாலும் கத்தியும், மீஞ்சூர் கோபியும் கொஞ்சம் ஸ்பெஷல். கோபி சொன்ன குற்றச்சாட்டில் உண்மை இருந்தது. அதனை பத்திரிகை, திரையுலகை சேர்ந்தவர்களே ஒப்புக் கொண்டனர்.


 
 
அதே கோபி எழுதிய கதை கருப்பர் நகர். வடசென்னை தலித் அரசியலை மையமாக வைத்து அவர் எழுதிய கதையைத்தான் ரஞ்சித், மெட்ராஸ் என்ற படமாக சுட்டுவிட்டார் என பிரச்சனை எழுந்தது. ரஞ்சித்துக்கு இருந்த தலித் அரசியல் பலம் காரணமாக இந்த விவகாரம் அமுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு கோபியை மௌனமாக்கினார். இத்தனைக்கும் கோபியும் ஒரு தலித்தான்.
 
தலித் அரசியலில் ஒரு தலித்தே பலிகடா ஆக்கப்பட்ட நிலையில், கோபியை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த நேரத்தில் கை கொடுத்தவர், நயன்தாரா. பொய்யில்லை மக்களே... கோபிக்கு ஆதரவுக்கரம் கொடுத்ததோடு அவரது இயக்கத்தில் சத்தமில்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கிறார். காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, தேசிய விருது வென்ற லால்குடி இளையராஜா கலை இயக்கம், பீட்டர் ஹெய்ன் சண்டை வடிவமைப்பு என்று பக்கா டீம். கத்தி போன்று இதுவும் தண்ணீர் பிரச்சனையை பற்றிய படம்தானாம்.
 
இதையடுத்து கோபி இயக்கப் போகிற படம்தான் வில்லங்கமே. வடசென்னையின் பாக்சிங் கலாச்சாரத்தை மையமாக வைத்து அடுத்தப் படத்தை இயக்க உள்ளாராம் கோபி. இந்தியா சுதந்திரமடையும் முன்பு வெள்ளைக்காரர்கள் வடசென்னையில் உள்ள தலித், நாயக்கர் மற்றும் மீனவ மக்களுக்கு பாக்சிங் பயிற்சி கொடுத்ததாகவும், அதில் இன்றும் தொடரும் விரோதத்தை மையமாக வைத்து அடுத்தப் படத்தை எடுக்கவிருப்பதாக கூறியுள்ளார்.
 
ரஞ்சித் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படமும் பாக்சிங்கை சம்பந்தப்படுத்தியது. வடசென்னையை மையமாக வைத்து கோபியும் ஒரு பாக்சிங் படத்தை எடுத்தால் ரஞ்சித் படத்துடன் அது முட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வழக்கம் போல ரஞ்சித்தின் தலித் அரசியல் பலம் கோபியை வீழ்த்துமா, இல்லை விலகிப் போகுமா?
 
வரும் நாள்களில் பரபரப்பான காட்சிகளுக்கு தயாராகுங்கள்.