வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 அக்டோபர் 2014 (15:39 IST)

நாளை வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

தீபாவளிக்கு கத்தியும், பூஜையும் திரையரங்குகளை ஆக்கிரமித்ததால் வேறு படங்கள் வெளியாகவில்லை. கத்தி வெளியான அனேக திரையரங்குகளில் அப்படம்தான் இந்த வாரமும் ஓடப்போகிறது. இரண்டு வாரங்கள் ஓட்டினால் மட்டுமே படத்தை வாங்கியவர்கள் நிறைவான லாபம் பார்க்க முடியும். பூஜையின் நிலையும் ஏறக்குறைய அதேதான்.
 
நாளை எதிர்பார்ப்புக்குரிய எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனரான குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே படம்தான் இருப்பதிலேயே பெரிய படம். 
 
பெட்ரோல், டீசல் நெருக்கடி ஏற்பட்டால் என்னவாகும் என்ற கேள்வியின் திரைவடிவம்தான் இந்தப் படம். பெட்ரோல், டீசல் நெருக்கடி இல்லையென்றால் இந்தப் படமே உருவாகியிருக்காது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
அவரது ஆரோகணம் நாயகி மையப் படமாக இருந்ததால்தான் ஓடவில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. நெருங்கி வா முத்தமிடாதே ஆண் மையப்படம். சரியான கமர்ஷியல் விஷயங்களும் படத்தில் உள்ளது, அதனால் கண்டிப்பாக ஓடும் என்ற நம்பிக்கை அவருக்கு. 
சபீர், பியா, ஸ்ருதி ஹரிகரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ஆரோகணத்தில் நடித்த விஜி சந்திரசேகருக்கு இதிலும் வெயிட்டான ரோல் உள்ளது.
 
ஏவிஏ புரொடக்ஷன்ஸின் இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.

நாளை திரைக்கு வரும் இன்னொரு படம் கல்கண்டு. நாகேஷின் படத்தைப் போட்டுதான் கல்கண்டை விளம்பரப்படுத்துகிறார்கள். பார்வையாளர்களிடம் படத்தை கொண்டு சேர்க்க அவர்களுக்கு நாகேஷை விட்டால் வேறு வழியில்லை. 
நாகேஷின் பேரனும், நாகேஷின் மகன் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம். அதை வைத்துதான் படத்தையே விளம்பரப்படுத்துகிறார்கள். டிம்பிள் என்ற புதுமுகம் ஹீரோயின். கில்லியில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர மனோபாலா, கஞ்சா கருப்பு போன்றவர்களும் இருக்கிறார்கள்.
 
ராஜரத்னம் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.எம்.நந்தகுமார் இயக்கியுள்ளார்.
சோக்கு சுந்தரம் என்ற படமும் நாளை வெளியாகிறது. பெயர் தெரியாத நடிகர்கள், பெருத்த வயறுடன் நடிகைகள் என்று போஸ்டரே ஒரு மார்க்கமாக இருக்கிறது. காலைக்காட்சி வறட்சியில் இருப்பவர்கள் ஒதுங்குவதுக்கு தோதான படம். ஆனைவாரி அ.ஸ்ரீதர் படத்தை இயக்கியிருக்கிறார்.

வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் ஆனைவாரி ராமன் நாயர் என்றெnரு கதாபாத்திரம் உண்டு. அதேபோல யானையை கூடையில் வாரியவரா இந்த ஆனைவாரி அ.ஸ்ரீதர்?
 
பேய் பொம்மைகள் என்ற படமும் நாளை வெளியாகிறது. படத்தின் போஸ்டரைப் பார்த்தால் சேதுவில் வரும் எங்கே செல்லும் இந்த சினிமா என்று பாடத் தோன்றுகிறது. நாலைந்து பொம்மைகளையும் கொஞ்சம் சிவப்பு சாயத்தையும் வைத்து எடுத்த மாதிரி ஒரே கசாப்பு தோற்றம். 
 
இவை தவிர இந்தி, ஆங்கிலப் படங்களும் திரைக்கு வருகின்றன. மொத்தத்தில் வரப்போகிற வாரமும் கத்தியும், பூஜையும்தான் பாக்ஸ் ஆபிஸில் முதலிரு இடத்தில் வரப்போகின்றன.