செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (11:56 IST)

கபாலி நஷ்டம் - புகாரும் மறுப்பும் முழு விவரம்

கபாலி வெளியாகி 125 நாள்கள் கடந்த நிலையில், கபாலி படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதன் முழு விவரம் என்ன என்பதை பார்ப்போம்.

 
கபாலி படம் வரலாறு காணாத அளவுக்கு வசூல் செய்ததாக படம் வெளியான போது கூறப்பட்டது. அதற்கேற்ப பட்டிதொட்டியெல்லாம் படம் சிறப்பாக ஓடியது. 100 ரூபாய் டிக்கெட்கள் இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்களுக்கு விற்கப்பட்டன. அதுவும் சர்ச்சையானது.
 
கபாலி மிகப்பெரிய வெற்றியை பெற்றதாகக் கூறி வெற்றி விழா கொண்டாடினார்கள் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குனர் ரஞ்சித்தும். இந்நிலையில், படம் வெளியாகி 125 தினங்கள் கடந்த பிறகு, கபாலியால் நஷ்டம் என்று திருச்சி, தஞ்சாவூர் திரையரங்கு உரிமையாளர்கள் பேட்டி அளித்துள்ளனர். நஷ்டஈடு கேட்டு தாணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முதலில் நஷ்டஈடு தருவதாகச் சொன்ன தாணு இப்போது முடியாது என்கிறார் எனவும், அதனால் ரஜினியை சந்தித்து முறையிட இருப்பதாகவும் ராமதாஸ் என்பவர் ஊடகங்களுக்கு பேட்டி தந்துள்ளார்.
 
கபாலி படம் அதிகளவில் வசூலித்தாலும் மிகப்பெரிய தொகைக்கு திரையரங்குகள் படத்தை வாங்கியதால் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் திரைப்பட தொழில் அறிந்தவர்கள். லிங்கா படத்தின் போதும் இதுதான் நடந்தது.
 
திருச்சி, தஞ்சாவூர் திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமில்லை மற்ற ஏரியா திரையரங்கு உரிமையாளர்களும் விரைவில் நஷ்டஈடு கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து விளக்கமளித்த தாணு, படம் வெளியாகி 125 நாள்கள் கழிந்த பிறகு படம் நஷ்டம் என்று சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் அதே திருச்சியில்தான் கபாலியின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கபாலியால் நஷ்டம் என்று கூறுகிறவர்களை எனக்கு தெரியாது அந்த ஏரியா விநியோக உரிமையை நான் பிரான்சிஸ் என்பவரிடம்தான் தந்தேன். இப்போது வந்திருப்பவர்கள் என்னிடம் படம் வாங்கவும் இல்லை, நானும் அவர்களிடம் பணம் வாங்கவில்லை. அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
 
பொதுவாக தயாரிப்பாளர்கள் ஒரு ஏரியா உரிமையை விநியோகஸ்தர்களிடம்தான் தருவார்கள். அவர்கள் அந்த ஏரியா திரையரங்குகளுக்கு படத்தை தருவார்கள். பிரான்சிஸிடமிருந்து படத்தை வாங்கியவர்கள்தான் இப்போது நஷ்டம் என்கிறார்கள்.
 
கபாலியை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் யார் என்றே தெரியாது என்று தாணு விளக்கமளித்துள்ள நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எதிர்விளக்கம் வர வாய்ப்புள்ளது.