வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (13:37 IST)

இந்தியாவின் அவமானமா நடிகர் விக்ரம்?

படிக்கும் போதே ஷாக்கடிக்கிறது இல்லையா? ஆனால், இதே கடுமையான வார்த்தைகளில்தான் நடிகர் விக்ரமை அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம்.ஸ்வாமி தனது பேஸ்புக் பக்கத்தில் சாடியிருக்கிறார்.


 
 
அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திரதினத்தையொட்டி கிரான்ட் பரேட் நடத்துவது வழக்கம். இந்தியாவிலுள்ள பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். இந்தமுறை நடிகர்கள் விக்ரம், அபிஷேக் பச்சன் அழைக்கப்பட்டிருந்தனர்.
 
விழாவில் கலந்து கொண்ட விக்ரம் ரசிகர்களை புறக்கணித்ததாகவும், அவர்கள் விக்ரமுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய போது மறுத்ததாகவும், அமெரிக்கவாழ் இந்தியர்களின் மனம் நோகும்படி வெறுப்புடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பிரகாஷ் எம்.ஸ்வாமி தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.
 
"உங்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் விக்ரம். இந்தியர்களை அவமானப்படுத்தவும், எப்போதும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கவும் நாங்கள் உங்களை அழைக்கவில்லை. உங்களது ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களையும் கூட நீங்கள் ஏற்கவில்லை. உங்களுடன் வந்த அபிஷேக் பச்சன் அனைவருடனும் நட்பாகப் பழகி, ரசிகர்களுடன் கைலுக்கிய போது, நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர் போல நடந்து கொண்டீர்கள். 
 
உண்மையில் நாங்கள் பிரபுதேவாவைத்தான் அழைக்கலாம் என இருந்தோம். ஆனால், அவருடைய வேலைப்பளு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
 
இதற்கு முன் இந்த இந்திய நாள் பரேட் நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் மிகவும் எளிமையாகப் பழகினார்கள். ரசிகர்களை சந்திப்பதற்கும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்கவேயில்லை. விக்ரமை வெறும் 3,0 40 பேர் சூழ்ந்ததற்கே அவர் இப்படி நடந்து கொண்டார். ஆனால், சரத்குமாரை ஒரு பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. இருந்தாலும் அவருடைய பணிவான 
அன்பை நியூயார்க் மக்கள் மறக்க மாட்டார்கள். விக்ரம், நீங்கள் சரத்குமாரை விட தகுதியிலும், சீனியாரிட்டியிலும் பெரியவரா?
 
அது மட்டுமல்ல, அழைப்பிதழில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என கண்டிப்பாகப் போடச் சொன்னீர்கள். வெளிநாட்டு நிகழ்வுகளில் விக்ரமை அழைக்க அவர் தகுதியானவர் அல்ல. அவருக்கு புகழில், தான் ஒரு ரஜினிகாந்த், ஷாரூக்கான் என நினைப்பு.
 
ஏர் இந்தியாவின் முதல் வகுப்பில் உங்களை அழைத்து வந்தது, சுற்றிப் பார்க்க அல்ல. அவ்வளவு செலவு செய்தது அவமானத்தை அனுபவிக்க அல்ல. உங்கள் மீது வெட்கப்படுகிறோம், நமது நாட்டுக்கு அவமானம், திரையுலகத்திற்கு அவமானம், நீங்கள் திமிர் பிடித்த ஒரு நடிகர், திமிர் பிடித்த அணுகுமுறை கொண்டவர்."
 
விக்ரம் என்னத்தான் வெறுப்புடன் நடந்து கொண்டாலும் அவரை இந்தியாவின் அவமானம் என்று கூறியது மிகவும் அதிகபடியான விமர்சனம். பிரகாஷ் எம்.ஸ்வாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு விக்ரம் தரப்பு மென்மையான மறுப்பை அளித்திருக்கிறது. 
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......

"விக்ரமுக்கு அழைப்பு விடுத்தது பெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோஷியேசன் என்ற அமைப்பே தவிர தனிப்பட்ட மனிதரல்ல. விக்ரம் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட மக்களும், ஒருங்கிணைப்பாளர்களும் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


 
 
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எப்ஐஏ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு விருந்தில் விக்ரம் கலந்து கொண்டார். அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், அதில் கலந்து கொண்ட மக்களுக்கும் நன்றாகவே தெரியும். எனவே சிலர் பதிவு செய்யும் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளை பெரிதுபடுத்த வேண்டாம்" என விக்ரமின் மேலாளர் கூறியுள்ளார்.


 
 
என்னத்தான் நடந்திருந்தாலும் விக்ரமை இத்தனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தது கண்ணியமில்லாத பெரும் தவறு.