செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (14:39 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம்

பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10&ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வியாபாரத்தை தொடங்கினாலும் அதில் நட்டத்தையும், கடனையும் ஏற்படுத்தினரோ! அடுக்கடுக்கான வேலைகளை தந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கினாரே! வாக்குறுதிகளை தந்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் கூனிக்குறுகி நின்றீர்களே! பல காலமாக நெருங்கிப் பழகியவர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டார்களே! சொந்த&பந்தங்கள் மத்தியில் உங்களைப் பற்றிய வதந்திகளை ஏற்படுத்தினரே! எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் திணறடித்தாரே! இது நாள் வரை காப்பாற்றி வைத்திருந்த கௌரவத்தை இழக்க வேண்டி வந்ததே!

குடும்பத்தில் உள்ளவர்களும், உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் போனார்களே! இப்படி பல வகையிலும் உங்களுக்கு தலைக்குனிவையும், வீண் பழிச் செல்லையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து இனி வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். முன்பு சவாலாகத் தெரிந்த வேலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மனைவியுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை மூண்டதே! பல நேரங்களில் மௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். கணவன்&மனைவியிடையே தாம்பத்தியம் இனிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதுப் பதவி, பெறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். மூத்த சகோதர வகையில் சகோதரங்கள் ஆதரவாகப் பேசுவதுடன், பொருளுதவியும் செய்வார்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இட வசதி, காற்றோட்ட வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே! இனி நல்ல வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்ப்புகள் குறையும். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மற்றவர்களின் தயவின்றி தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். இளைய சகோதரிக்கு நிச்சயமாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.       
 
உங்களின் 3&ம் வீட்டை குரு பார்ப்பதால் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வழக்கு சாதகமாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.  
 
குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குலதெய்வக் கோவிலுக்கு நன்கொடை வழங்குவீர்கள்.                            
குரு தனது 7&ம் பார்வையால் உங்களின் 5&ம் வீட்டை பார்ப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். அடிமனசில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணி பாதியிலே நின்ற போனதே! இனி வங்கி கடனுதவியுடன் முழுமையாக வீடு கட்டி முடிப்பீர்கள்.  

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சமாளிக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சின்ன சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.   
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் ராசியாதிபதி&அஷ்டமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஹார்மோன் பிரச்னைகள், கழுத்து வலி, மூட்டு வலி, பின் மண்டை வலி வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது.
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1&ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2&ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பல வேலைகளையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1&ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வீண் பிடிவாதம், முன்கோபம் வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களை சிலர் பரப்புவார்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்யம் சீராகும். கணவன்&மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். சுற்றுலா தளங்களுக்குச் சென்று வருவீர்கள். தேமல், அலர்ஜி நீங்கும்.
 
வியாபாரிகளே! போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று பல முறை பெருந்தொகை போட்டு மாட்டிக்கொண்டீர்களே! அந்த அவலநிலை மாறும். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.          
 
உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். உங்களை விட வயதில், தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைத்ததே! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 
 
கன்னிப்பெண்களே! பகல் கனவுகள் கண்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி அதை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் இறங்குவீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். கல்யாணமும் கூடி வரும். உங்கள் ரசனைக் கேற்றபடி நல்ல கணவர் அமைவார். கை, காலெல்லாம் சில நேரம் மரத்துப் போனதே! இனி உடலில் புது ரத்தம் பாயும். உற்சாகம் தங்கும். புது வேலை அமையும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். 
மாணவ&மாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்று, ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். 
 
கலைத்துறையினரே! திறமையிருந்தும் வாய்ப்புகள் நழுவிக் கொண்டே போனதே! அந்த நிலை மாறும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள். வருமானம் உயரும்.
 
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள எஸ்.புதூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு சனத்குமாரேஸ்வரரை ஏதேனும் ஓரு வெள்ளிக்கிழமையில் வணங்குங்கள். காது கோளாதவர்களுக்கு உதவுங்கள்.