1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (14:54 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - தனுசு

சுய கௌரவமும், தன்மானமும், பிறர் உழைப்பில் வாழ விரும்பாத குணமும் உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8-ம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், வீண் விரையங்களையும், பணப்பற்றாக்குறையையும் கொடுத்து வந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து, எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சில சமயங்களில் நமக்கு சரியாக வாழத் தெரியவில்லையோ என்றெல்லாம் யோசித்தீர்களே! இனி இப்படித் தான் வாழ வேண்டுமென்ற ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வெகுநாட்களாக வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும். குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த நிலை மாறும்.

எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். கல்வியாளர்கள், ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நெடுநாள் கனவாக இருந்து வந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டீர்களே! இனி சாந்தமாகப் பேசி சாதிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய பொருட்கள், சமைலறை சாதனங்களை மாற்றுவீர்கள். அடகிலிருந்த பத்திரத்தை மீட்கும் அளவிற்கு பணவரவு அதிகரிக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். சரியான தூக்கமில்லாமல் ஏதோ ஒன்று அழுத்தியதுப் போல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பணவரவு சரளமாக வருவதால் வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். 
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். துவண்டிருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி நாலு காசு எடுத்து வைக்கு அளவுக்கு வருமானம் கூடும். எப்போதும் பரபரப்பாக இருப்பதைப் போல காணப்பட்டாலும், தன் காரியத்தை சாதிக்க முடியாமல் தத்தளித்தீர்களே, அந்த அவல நிலை மாறும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கல்யாணத்தை கோலகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உத்யோகம் அமையும். வீடு, வாகன வசதிகள் பெருகும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிப்பீர்கள்.
 
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சின்ன சின்ன வேலையை தொட்டால் கூட தடங்கலானதே! இனி முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள். இளைய சகோதர, சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பாசமழைப் பொழிவார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி ஒய்யாரமாக செல்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். நல்ல வசதியான வீட்டில் குடி புகுவீர்கள். சிலர் லோன் வாங்கி சொந்த வீடு வாங்குவீர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்காலத்தில் அக்கறைக் கொண்டு உங்களின் அனுபவ அறிவை பயன்படுத்தி அறிவுரைகளை தருவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 
 
குரு தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் எவ்வளவோ மருத்துவ சோதனைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து, பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.    

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடியும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும். 
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் சஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதிப் பெருகும். பணப்புழக்கம் அதிமாகும். ஷேர் மூலமாக பணம் வரும். என்றாலும் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தோலில் நமைச்சல், தடிப்பு வந்துப் போகும். 
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையில் ஆரோக்யம் சீராகும். அவர்வழியில் உதவிகளும் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துப் போகும். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் புதுத் தெம்பு பிறக்கும். என்றாலும் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். யாருக்காகவும் எந்த வாக்குறுதிகளும் தர வேண்டாம். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். 
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விலகுவீர்கள். 
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன்-மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.
 
வியாபாரிகளே! சோர்ந்திருந்த நீங்கள் இப்போது புத்துயிர் பெறுவீர்கள். தொழிலில் ஒரு ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். பெட்ரோ-கெமிக்கல், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பிரச்னை கொடுத்து வந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஏற்ற பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர்கள்.    
 
உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும்,பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணி நிரந்தரமாகும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். பதவி, சம்பள உயர்வு உண்டு. சிலர் அலுவலகம் சம்பந்தமாக வெளிநாடு, அண்டை மாநிலம் சென்று வருவீர்கள்.  
 
கன்னிப்பெண்களே! தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். சக தோழிகளுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதே என்று வருந்தினீர்களே! கவலை வேண்டாம். கெட்டி மேளச் சத்தம் கேட்கும். முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். தடைபட்ட படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்வீர்கள். கசந்த காதல் இனிக்கும். 
 
மாணவ-மாணவிகளே! ஆசிரியர்கள் உங்களை மட்டம் தட்டி பேசினார்களே! அவர்களே வியக்கும்படி அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சக மாணவர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். கலை, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். திரையிடப்படாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். 
 
பரிகாரம்:
திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமல தாயாரையும் சனிக் கிழமையில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.