வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (13:29 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - கன்னி

கனிவாகப் பேசி காய் நகர்த்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்களின் விரைய வீடான 12-ம் வீட்டில் அமர்வதால் உங்கள் முன்னேற்றம் பெரிதாக தடைபடாது. கொஞ்சம் சிக்கனத்தை மட்டும் கடைபிடிப்பது நல்லது. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச் செலவுகளும் வந்தவண்ணம் இருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் ஆடம்பரமாகப் பேசுபவர்கள் யார், உண்மையான அன்புடன் பழகுபவர்கள் யார், உங்கள் மீது நிஜமான அக்கரை உள்ளவர்கள் யார் என்பதனைப் புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். குடும்பத்தில் யாரும் உங்களை மதிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வீர்கள். மனைவி அவ்வப்போது கோபப்படுவார். எந்த சூழ்நிலையிலும் அவரை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள்.

உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். எந்த ஒரு காரியத்திலும் மற்றவர்களை நம்பிக் கொண்டிருக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலையும் வந்து நீங்கும்.

மனதில் பட்டதை பளீச்சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த கால சுகமான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். 
 
குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவரைப் புரிந்துக் கொள்வீர்கள். அம்மான், அத்தை வகையில் இருந்து வந்த மனவருத்தங்கள் விலகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டை மாற்றி அமைதியான சூழல் உள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். அரசாங்க அனுமதி கிடைத்து சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதுசு வாங்குவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள்.

உங்களது 6-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சில சமயங்களில் எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமொழி பேசுபவர்கள், மதத்தினர்களால் உதவிகள் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 
 
குரு தனது 9-ம் பார்வையால் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களது பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும் என்றாலும் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்விர்கள். சகோதரங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் நாட்டமின்மை, வீண் சந்தேகம், இழப்புகள், ஏமாற்றங்கள், திடீர் பயணங்கள், மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் தன-பாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளி சாமான்கள் வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும். 
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் விரையாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செவதால் அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடிப்பீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.        
   
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசிக்குள் குருபகவான் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒருவித படபடப்பு, வீண் பிடிவாதம், தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி வந்து நீங்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். குடும்பத்திலும் பிரிவுகள் உண்டாகும். உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும்.   

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் உங்கள் ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஆரோக்யம் சீராகும். மனஇறுக்கங்கள் விலகும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள். 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.  
            
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். தைராய்டை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தந்தையாருடன் மோதல்கள் வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.    

வியாபாரிகளே! அறிவுப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் முடிவெடுக்கப் பாருங்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டப்பாருங்கள். கடன் வாங்கி புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள், நவீனமாக்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்களை நயமாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். தரமான சரக்குகளை விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். வேற்றுமாநிலம், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள்.     உத்யோகஸ்தர்களே! மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலட்சியம் வேண்டாம். பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும், உங்களை குறை கூறத்தான் செய்வார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அவ்வப்போது வருந்துவீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. 
 
கன்னிப் பெண்களே! உங்களின் நட்பு வட்டம் விரியும். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். வருடப் பிற்பகுதியில் கெட்டிமேளச்சத்தம் வீட்டில் கேட்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  
 
மாணவ-மாணவிகளே! ஏதோ படித்தோம் பரீட்சையில் பாசாகிவிடுவோம் என்று கனவு காணாதீர்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். தெரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேச வேண்டாம். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.   
 
பரிகாரம்
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயுளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.