வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (13:06 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்

புதுமை விரும்பிகளே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சல்களையும், கஷ்ட, நஷ்டங்களையும், டென்ஷனையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! மருந்து, மாத்திரையுமாக உங்களைப் பாடாய்ப்படுத்தினாரே! வாழ்க்கையில் ஒருவித வெறுப்புணர்வையும், எப்போதும் கசப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்தாரே! அவமானங்களாலும், பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டீர்களே! குடும்பத்தினர் கூட உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்தார்களே! இப்படி பலவகையிலும் உங்களை அலைக்கழித்து, எதிர்காலம் என்னவாகுமோ என்றெல்லாம் அச்சுறுத்திய குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டங்கள் நீங்கும்.

சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். வீட்டில் சாதாரணமாகப் பேசினால் கூட பிரச்னைகள் வெடித்ததே! இனி இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து திணறடித்ததே! இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்களிடம் கடன் வாங்கிவிட்டு இதோ, அதோ என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தொகையை திரும்பித் தருவார்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் சந்தோஷம் குடி கொள்ளும். புயல் வீசிய உங்கள் இல்லத்தில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். தோற்றப் பொலிவுக் கூடும்.

ஒன்றுமே இல்லாத சின்ன விஷயத்திற்கு கூட இந்த பிரச்னை இப்படியாகுமோ, அப்படியாகும் என்றெல்லாம் உங்கள் அடிமனதில் ஒரு கவலையுடன் நிம்மதியான சாப்பாடு, தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நிம்மதியாக சாப்பிடுவீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். வங்கியில் அடகு வைத்திருந்த நகை, வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும். 
 
குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையத் தொடங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.   
 
உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் பழைய சொந்தங்கள் தேடி வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் அமையும். விசா பெறுவதில் தடையிருக்காது. மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.   
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது முதலீடுகள் செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மலையாளம், தெலுங்குப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வழக்கு மூலம் பணம் வரும். மகளுக்கு வரன் அமையும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், லேப்-டாப், செல் ஃபோன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும்.   
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணம் வந்துப் போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். சொத்து சேர்க்கை உண்டாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதிக் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.  
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். 
 
வியாபாரிகளே! தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளால் கையை சுட்டுக் கொண்டீர்களே! கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனைகள் வெடித்ததே! அந்த அவல நிலையெல்லாம் மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீரும். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாட்கள் உங்களை நிலை குலைய வைத்தார்களே! இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை நீக்கி விட்டு உங்களுக்கு தகுந்தாற் போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், ஸ்டேஷனரி, துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். 
 
உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! இரவு பகலாக உழைத்தும் பலனில்லையே! உங்களுடைய திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறினார்களே! இனி அந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுத்தி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.  
 
கன்னிப்பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். அலர்ஜி, வயிற்று வலி விலகும். ஆடை அணிகலன்கள் சேரும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியும் என கலங்க வேண்டாம். விரைவிலேயே கெட்டி மேளம் உண்டு.

பெற்றோரின் ஆதரவு கிட்டும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்புக் கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். 
 
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். பழைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும். 
 
பரிகாரம்:
கொல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமூகாம்பிகையை பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.