வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2016 (16:46 IST)

துலாம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

நியாயவாதிகளே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள்.

உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 
புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வருடப் பிறப்பின் போது புதன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மனைவிக்கு வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
 
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள் என்றாலும் 6-ல் வீட்டில் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 2-ல் அமர்ந்து பாதச்சனியாக தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
 
கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் கண்ணை பரிசோதித்து மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரும். நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குத் தள்ளிப் போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
 
உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். பூர்வீக சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையேயென வருத்தப்படுவீர்கள். பேருந்துகளில் செல்லும் போது படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.
 
குருபகவான் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் வந்தமைவார். மழலை பாக்யம் கிட்டும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
 
அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி வலிதமாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் வீண் விரையம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துச் செல்லும். ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
 
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரும். சாதாரணமாக நெஞ்சு வலிக்கும் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் பயந்துவிடாதீர்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்வது நல்லது. குடிநீரை காய்ச்சி அருந்துங்கள்.
 
நேரம் தவறி சாப்பிட வேண்டாம். மஞ்சள் காமாலை, அல்சர்க்கான அறிகுறிகள் தெரியக் கூடும். லாகிரி வஸ்துக்கள், அசைவம் மற்றும் கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
இந்த துர்முகி ஆண்டு முழுக்கவே ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
 
குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தள்ளிப் போன திருமண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு, மனை வாங்கும் யயோகம் உண்டாகும். தெலுங்கு, ஹிந்தி மொழிப் பேசுபவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும்.
 
ஆனால் கேது இந்தாண்டு முழுக்க 5-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் அடிமனதில் வீண் குழப்பங்கள் எழும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள்.
 
கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். மனைவிக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். கடன் பிரச்னையால் இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். உறவினர், நண்பர்களுடன் பகைமை வரக்கூடும்.
 
27.01.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி, மூச்சுப் பிடிப்பு வந்துச் செல்லும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனத்தில் கவனமாக செல்லுங்கள். மனைவிக்கு வயிற்று வலி, தைராய்டு பிரச்னை வந்துப் போகும்.
 
புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். சிலர் சொந்த இடம் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
 
உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். என்றாலும் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது வேலையும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி ஆசிரியரைக் கேள்வி கேட்பீர்கள்.
 
கலைத்துறையினரே! பிரபலமாவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.
 
இந்த துர்முகி வருடம் தடுமாற்றங்களையும் இழப்புகளையும் தந்தாலும் இறுதியில் புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமையும். 
 
பரிகாரம்:
 
ஏகாதசி திதி நாளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்குங்கள்.