வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (16:38 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - ரிஷபம்

பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
 
சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அழகு, ஆரோக்யம் கூடும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், கம்பியூட்டர், லேப் டாப் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். வி.ஐ.பியின் அறிமுகம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
 
களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையும் பெரிதாக்க வேண்டாம். பிரிவுகள் வரக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவிக்கு ஃபைப்ராய்டு, ஹார்மோன் பிரச்னைகள் வரக்கூடும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் புதிதாக அறிமுகமாகுபவரை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீது வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. கவனமாக செயல்படுங்கள். வெகுளித்தனமாக பேசுவதாக நினைத்து முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்களை விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். 
 
04.07.2015 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சில நேரங்களில் எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவதால் முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். என்றாலும் முறையான அரசாங்க அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாருடன் விவாதங்கள் வந்துப் போகும். அவருக்கு மூட்டு வலி, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். அடுத்தடுத்த பயணங்களாலும் அலைச்சலாலும் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும்.   
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உங்களின் எண்ணங்களை அவர்களிடம் திணிக்க வேண்டாம். மகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். மகனின் பொறுப்பற்ற போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்ரூபமெடுக்கும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பழைக கடன் பிரச்னையை நினைத்து தூக்கம் கெடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
 
கேது ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் பொறுப்புகள் அதிகமாகும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும் வந்துப் போகும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சாலை விதிமுறைகளை மீற வேண்டாம். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம், வேலைச்சுமை, சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்களெல்லாம் நிகழக்கூடும்.
 
ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைக்கட்டும். வேலைக் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். 
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆடி மாதம் 15-ந் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமடைவதால் தொண்டை, கண், பல் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். திடீரென்று வந்து சேரும் வேலையாட்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
 
வட இந்திய வேலையாட்களை பணியில் வைக்கும் போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பணம் பட்டுவாடாக்களை நீங்களே நேரடியாக சென்று செய்யுங்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், ஸ்க்ராப், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பங்குதாரர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.
 
நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்துப் போகும். உங்களை விட தகுதியில், அனுபவத்தில் குறைந்தவர்களுக்கு கீழ் நீங்கள் வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மாசி, பங்குனி மாதங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. கண்டகச் சனி நடப்பதால் சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். கெட்ட பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். கணிதம், வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
 
இந்த தமிழ் புத்தாண்டு பணத்தட்டுப்பாடு மற்றும் பகைமையையும் தருவதாக இருந்தாலும் விடாமுயற்சியாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றியை தருவதாக அமையும்.