1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (15:35 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - கன்னி

பழைய அனுபவங்களை பதிவு செய்பவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும்.
 
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்ப வருமானம் உயரும். பழைய கடனை பைசல் செய்வதற்கும் வழி, வகை பிறக்கும். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சிலர் அரசியலில் தீவிரமாக இரங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.
 
உங்களுடைய ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரும். வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். எனவே வெளியூர் பயணங்களின் போது சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துங்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
 
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பூச்சிக் கடி மற்றும் வைரஸ் மூலமாக காய்ச்சல் வரக்கூடும். உடலில் தடிப்பு வந்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. ராகு ராசிக்குள்ளேயே 07.01.2016 வரை நீடிப்பதால் முன்கோபம் அதிகமாகும். நண்பர்களுடன் பகை வந்துப் போகும். தூக்கம் குறையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
 
உங்களுடைய ராசிக்கு 7-ல் கேது அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். அவ்வப்போது அலைச்சலும் இருக்கும். சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சாதாரண விஷயங்களை பெரிதாக்க வேண்டாம். மனைவிவழியில் செலவினங்கள் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களாலும் அவ்வப்போது அன்புத்தொல்லை அதிகமாகும். மனைவிக்கு பித்தப் பை சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும்.
 
08.01.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால் அதுமுதல் யோகமான பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் மையப்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால் இக்காலக்கட்டத்தில் இரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் பற்றாக்குறையும், மின்சாரம், நெருப்பால் சிறுசிறு விபத்துகளும், சகோதர வகையில் செலவுகளும், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.  
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் போது இந்த மன்மத வருடம் பிறப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அடங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பயனடைவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். 
 
சந்திரன் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். 
 
உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். எங்குச் சென்றாலும் தடைகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சகோதர வகையில் மனவருத்தம் வரும். பூமி, சொத்து, பாகப்பிரிவினை பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
வீட்டு மனை, விவசாய பூமி வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகமாகும். நீர் சுளுக்கு, தசைப் பிடிப்பு, மூச்சுத் திணறல் வரக்கூடும். தலையில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இருசக்கர வாகனத்தை இயக்குவோர் மறவாமல் தலைக்கவசம் அணிந்துக் கொள்வது நல்லது. உங்களுடைய ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் என்பதை கண்டறிவதில் குழப்பம் வந்துப் போகும்.
 
உங்களின் தன-பாக்யாதிபதியான சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

மகனுக்கு வியாபாரம் அமைத்துத் தருவீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீடு மாறக் கூடிய அமைப்பும் உருவாகும். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். குலதெய்வக் கோவிலையும் எடுத்துக் கட்டுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
வியாபாரத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். கடன் தொகையை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். கட்டுமானப் பொருட்கள், கண்ஸ்டக்ஷன், வாகன வகைகள், இரும்பு, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் பணிவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் புது கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் வியாபாரத்தை விரிவுப்படுத்த வழி, வகைப் பிறக்கும்.  
 
உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். ஆனி, ஆடி மாதங்களில் சம்பளம் உயரும். உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். உங்களுடைய கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பள நிலுவைத் தொகை, பாக்கித் தொகையெல்லாம் கைக்கு வரும். மார்கழி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். 
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அரசாங்க உதவியும் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வேலையும் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமைந்து திருமணமும் நல்ல விதத்தில் முடிவடையும். பெற்றோர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்வார்கள்.
 
இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளையும், அடிப்படை வசதிகளை ஓரளவு அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.