வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (15:00 IST)

மன்மத வருட ராசிப் பலன்கள் - கும்பம்

கஞ்சத் தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! உங்களுடைய ராசிநாதனாகிய சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.

சந்தர்ப்ப, சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறமையெல்லாம் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவுக் கொண்டாடுவீர்கள். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். சவால்களை ஏற்று சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். ராசிநாதன் வலுவடைந்து காணப்படுவதால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அழகு, ஆரோக்யம் கூடும். நோயின் தன்மை குறையும்.
 
உங்களுடைய ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், திடீர் பயணங்களும் இருக்கும். பணப்பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயந்துக் கொண்டிருப்பீர்கள். அதையே சமாளிக்க முடியவில்லை இப்போது புதுக் கடன் வேறு அதிகரிக்கிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை காப்பாற்றி வைத்திருக்கக்கூடிய குடும்ப கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் உங்களுக்கு உள்மனதில் தோன்றும். அவ்வப்போது தூக்கமும் குறையும். உங்கள் மீது சிலர் வீண் பழிகள் சுமத்துவார்கள். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழும். குடும்பத்திலும் அவ்வப்போது வளைந்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆனால் 5.07.2015 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் அதுமுதல் படபடப்பு நீங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கிருந்த கழுத்து வலி, மூட்டு வலி நீங்கும். தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். எப்போது பார்த்தாலும் வீட்டில் குழப்பங்களும், சண்டை, சச்சரவுகளும் நிலவியதே அந்த நிலை மாறும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரனும் அமையும். மகன் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். சிலர் பழைய வீட்டை தந்து விட்டு புதிதாக வாங்குவீர்கள். புறநகர் பகுதியில் பூமி வாங்கும் அமைப்பும் உருவாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து அவ்வப்போது கலங்கினீர்களே! அவையெல்லாம் நீங்கும். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோய்கள் விலகும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 
 
உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் நின்றுக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். தவறான வாக்குறுதிகள் தர வேண்டாம். கண் எரிச்சல், கண் வலி வந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை குறையுங்கள். பூச்சுக்கடி, கொசுக்கடியால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். அதேப் போல டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போட்டை எல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். அதேப் போல அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.
 
8.01.2016 முதல் கேது உங்களுடைய ராசிக்குள் நுழைவதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். சோர்வு, களைப்பு அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்களும் அதிகமாகும். ஆனால் குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேதுவின் மீது விழுவதால் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

ராகு 7-ல் நுழைவதால் மனைவிக்கு கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் மனைவிக்கு வந்துப் போகும். ஆனால் ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேர்வதால் கெடுபலன்கள் குறையும். கணவன்-மனைவிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
 
சூரியன், செவ்வாய், புதன் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பூமிப் பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். இளைய சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சுக ஸ்தானமான வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். அவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறை, படுக்கையறை அழகுப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த பிரபலங்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களிலும் கலந்துக் கொள்ள உங்களுக்கு அழைப்பு வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இதுவரை ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! உப்பு விற்க போனால் மழைப் பொழிந்தது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் எதை தொட்டாலும் அது நட்டத்தில் சென்று முடிந்ததே! வேலையாட்களும் உங்களை ஏமாற்றினார்கள். பங்குதாரர்களாலும் நீங்கள் பழி வாங்கப்பட்டீர்கள் அந்த நிலையெல்லாம் இந்த வருடத்தில் மாறும். குறிப்பாக 5.7.2015 முதல் வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த பண உதவியும், கடன் உதவியும் கிடைக்கும். நல்ல மனசுள்ளவர்கள் பங்குதாரர்களாக வருவார்கள்.

அதேப் போல உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் நல்ல வேலையாட்களும் அமைவார்கள். விடுபட்டுப் போன பழைய தொடர்புகள் வியாபாரத்தில் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, துணி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் சரியாகும். வாராக் கடன்கள் வசூலாகும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும்.
 
உத்யோகத்தில் கடந்தாண்டு நீங்கள் கசக்கிப் பிழியப்பட்டீர்கள். கடினமாக உழைத்தும் அதற்கான பாராட்டுகளும், பலன்களும் கிடைக்காமல் தவியாய் தவித்தீர்கள். சக ஊழியர்களாலும் நீங்கள் சின்ன சின்ன அவமானங்களை சந்திதீர்கள். மூத்த அதிகாரிகளாலும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டீர்கள். அந்த நிலை இந்த வருடத்தில் மாறும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களை ஆதரிக்கும் புது அதிகாரி மேலதிகாரியாக வந்து சேரும். சக ஊழியர்களும் உங்களுடைய உண்மைத் தன்மையை உணருவார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டுப் போன சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி எதிர்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். 
 
மாணவ-மாணவிகளே! மறதி எல்லாம் நீங்கும். நினைவாற்றல் பெருகும். நன்கு படிக்கக்கூடிய மாணவர்களின் நட்பு கிடைக்கும். வகுப்பறையில் ஆசிரியர்களிடம் சந்தேங்களை கேட்க தயங்கினீர்களே! அந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் எளிதாக சேர்வீர்கள். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பிருக்கிறது.
 
கன்னிப் பெண்களே! கூடா நட்பால் நிம்மதியை இழந்தீர்களே! இனி நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சுயநலவாதிகளிடமிருந்து விடுபடுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணம் சிறப்பாக முடிவடையும். உங்களுடைய கல்வி தகுதிக் கேற்ப நல்ல வேலையும் கிடைக்கும். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலைக் கிடைத்தால் ஏற்றுக் கொள்வது நல்லது.
 
இந்தப் புத்தாண்டு புதுத் தெம்பையும், வசதி, வாய்ப்பையும் தருவதுடன் சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.