வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆன்மிகத்தில் எழும் சில சந்தேகங்களும் பதில்களும்...!

ருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்?: ஏழு வயது முதல் அணியலாம். விபூதி பூசி ஐந்தெழுத்து மந்திரத்தைத் தெரிந்து ஜெபம் செய்யக்கூடிய வயதும்  அது தான். எல்லோரும் கட்டாயம் இதைப் பின்பற்றினால் மக்களிடையே பண்பாடு அதிகரிக்கும்.
பெற்றோர்களின் பாவபுண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?: நீதிநூல்கள் அப்படித்தான் சொல்கின்றன. பெற்றோர் செய்த புண்ணியம் பிள்ளைகளுக்கு வாழ்வைத் தரும். இதே போலவே, பாவம் அவர்களின் வாழ்வைப் பாதிக்கும். பாவத்தினால் ஏற்படும் கஷ்டங்களைப் போக்க வேண்டுமானால், பிள்ளைகள் தங்களைத்  திருத்திக் கொண்டு அதிகமான புண்ணியங்களைச் செய்வது தான் ஒரே வழி.
 
மூன்றாம் பிறையை பார்க்கக்கூடாது... ஏன்?: மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே "சந்திரதரிசனம்' என்பர். இதனால், செல்வ வளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், "பித்தா பிறைசூடி' என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம்  பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம்  நீங்கிவிடும்.
 
அமாவாசை தவிர மற்ற நாட்களிலும் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?: தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது நல்லது. அரிசிமாவினால் கோலம் இடுவதால்  எறும்பு போன்ற சிறிய உயிர்களுக்கும், சாதம் வைப்பதால் காகம் முதலிய பறவைகளுக்கும், அன்னதானம் அளிப்பதால் ஏழைகளுக்கும் உணவளித்த புண்ணியம் உண்டாகும். உயிர்களுக்கு உதவுவதை "பூதயக்ஞம்' என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை தினமும் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.