வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (17:44 IST)

விருச்சிகம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தளராத தன்னம்பிக்கையாளர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது பிறப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க அனுமதிக் கிடைத்து புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
 
வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் 2-ல் நிற்பதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். ஆனால் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் அச்சம் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையும் வந்துப் போகும். கவலைப்படாதீர்கள். சரியான நேரத்திற்கு மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி எளிய உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வது நல்லது.
 
நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லி ஆதாயம் தேட வேண்டாம். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது.
 
01.01.2016 முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.
 
பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. படிப்பிற்கு தகுந்த வேலையில் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த உங்களுக்கு அதிக சம்பளத்துடன் எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மழலை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
 
எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்து சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். கால்சியம் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள்.
 
08.01.2016 முதல் ராகு 10-ம் வீட்டில் நுழைவதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும். தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். என்றாலும் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.
 
ஆனால் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும். தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, கணுக்கால் வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கழிவு நீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாட்கள் பிரச்சனையும் வந்துப் போகும். சொத்து விற்கும் போதும் ஓரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப் பாருங்கள். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் சொந்தக்காரர்களால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
 
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். உங்களுக்கு எதிராக புதிது புதிதுதாக போட்டியாளர்கள் வருவார்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். ஸ்டேஷனரி, எண்டர் பிரைசஸ், மூலிகை, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபமடைவீர்கள்.
 
8.01.2016 முதல் ராகு உத்யோக ஸ்தானத்தில் அமர்வதால் உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தக்க சமயத்தில் கிடைக்காது அந்த நேரத்தில் உங்கள் மீது கேஸ், கொரிஸ் போட்டு அனுப்புவார்கள். சிலருக்கு மெமோ கொடுப்பார்கள். இத்தனை வருட காலமாக உழைத்து, எல்லாம் கூடி, கனிஞ்சி வரும் நேரத்தில் இப்படி ஆகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளை போராடி பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தைரியம் கூடும். அண்டைமாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். பசியின்மை, ஸ்கின் அலர்ஜி வந்துப் போகும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.
 
கலைத்துறையினரே! பகட்டாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.
 
அரசியல்வாதிகளே! உட்கட்சிப் பூசல் வெடிக்கும். கட்சியைப் பற்றி போற்றியும், தூற்றியும் பேச வேண்டாம். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். வழக்கில் சிக்கிக் கொள்ளாதிர்கள்.
 
விவசாயிகளே! வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப்பாருங்கள்.
 
இந்தப் புத்தாண்டு இட மாற்றத்தையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்:
 
கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மனை பௌர்ணமி திதியில் சென்று வணங்குங்கள். துப்புரவு தொழிலாளிக்கு உதவுங்கள்.