வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:23 IST)

மிதுனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

சமாதானத்தை விரும்பும் நீங்கள், சச்சரவுகளை தவிர்ப்பீர்கள். இதுவரை உங்களின் 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, பிரச்னைகளையும் தந்து உங்களை நிம்மதியில்லாமல் செய்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் அதிரடி யோகம் தரும் 6-ஆம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், பணவரவையும் அள்ளித் தரவுள்ளார்.

இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! எப்போது பார்த்தாலும் ஒரு குழப்பத்துடன், முகவாட்டதுடன் காணப்பட்டீர்களே! குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவி வந்ததே! பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தென்றல் வீசும். அழகு, ஆரோக்யம் கூடும். சமயோஜித புத்தியாலும், மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாகவும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நண்பர்கள், உறவினர்களெல்லாம் மாறி மாறி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவர்களெல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே! அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் தருவார்கள். கூடாபழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் அடிமனதில் மறைந்துக் கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தள்ளிப் போய் கொண்டே இருந்ததே! இனி கண்ணுக்கு அழகான மணமகன் வந்தமைவார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை சிறுக சிறுக பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்களின் சப்தம-ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 6-ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், மனதில் இனம்புரியாத பயம், ஏமாற்றங்கள், பண விரையம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச் சைகள் வந்துப் போகும். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். திருமணம் சிலருக்கு தள்ளிப் போகும். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை சனி உங்கள் ராசிக்கு 5-ம் வீடான துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் செல்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். கர்ப்பிணிப் பெண் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.  
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாதக்கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.  சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.      
    
உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. தர்மகாரியங்கள் பலவும் செய்வீர்கள்.   

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, முன்கோபம், உறவினர் பகை, அசதி, சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.     
 
சனிபகவான் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.   
 
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இனி மக்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். பிரபலமான இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.   
 
உத்தியோகத்தில் இருந்து வந்த அதிருப்தி விலகும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துக் கொண்டு பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.     
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உடல் ஆரோக்யம் சீராகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். வேற்றுமாநிலத்தில் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். 
 
இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர்யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.