1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:14 IST)

விருச்சிகம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நீங்கள், கொள்கை பிடிப்புடன் வாழ்பவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், தூக்கமின்மையையும் தந்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜன்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே செய்வார். எவ்வளவு தான் சிக்கனம் பிடித்து சேமிக்க நினைத்தாலும் அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே!

முதல் முயற்சியிலேயே எந்த ஒரு விஷயங்களையும் முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். அவசர தேவைக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகி அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.

ஆனால் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் அச்சம் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையும் வந்துப் போகும். கவலைப்படாதீர்கள். சரியான நேரத்திற்கு மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாமே. சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து சோப்பு, ஷாம்புவையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.

தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.

அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது.  

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் தன-பூர்வ புண்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே சனி செல்வதால் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். ஆனால் மனஇறுக்கம், வீண் பிரச்னை, குடும்பத்தில் நிம்மதியின்மை, சந்தேகம், ஏமாற்றம், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் வந்துப் போகும். காய்ச்சல், சளித் தொந்தரவு, மூச்சுத் திணறல் வரக்கூடும். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு விரையச் சனியாக 12-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். தூக்கம் குறையும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.
 
உங்கள் திருதியாதிபதியும்-சுகாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்ற புதிதாக வீடு வாங்குவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தாயாருடனான மோதல்கள் விலகும். சகோதரங்களால் பலனடைவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், பிறமொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது விதிமுறைகளை மீற வேண்டாம்.
     
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சமூகத்தில் மதிக்கத் தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். என்றாலும் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். விசா கிடைக்கும்.  

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நெடுநாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.  
 
சனிபகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிக்க வேண்டி வரும். ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். தன்னம்பிக்கையும் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும். 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். சனிபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். 
 
வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், உணவு வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள்.
 
கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். மாணவ-மாணவிகளே! மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள். 
 
இந்த சனி மாற்றம் சற்றே ஆரோக்ய குறைவையும், எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் ஒரளவு வருமானத்தையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம்:
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதியிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.