வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:16 IST)

மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

மந்திரியானாலும் மனதில் பட்டதை பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்ததுடன், உத்தியோகத்திலும் நெருக்கடிகளை தந்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

நீங்கள் எவ்வளவு தான் விழுந்து விழுந்து உழைத்தாலும் பெயரும், புகழும் மற்றொருவருக்குப் போனதே! பணம் வந்தாலுமே பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானதே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! இப்படிப்பட்ட தொல்லைகளெல்லாம் இனி நீங்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். எப்போதும் சோர்வு, சலிப்புடன் காணப்பட்ட நீங்கள் இனி உற்சாகமாக செயல்படத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். சிலர் பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.

மகளுக்கு உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அவசரத்திற்கு அக்கம்-பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்த முடிப்பீர்கள். மனைவிவழியில் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த வகையில் கௌரவப் பதவி வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 11-ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு.  
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். என்றாலும் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். 
 
உங்கள் ராசிநாதன் சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் நீண்ட ஆசைகள் நிறைவேறும். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் வீண் டென்ஷன், விரையம், மந்தம், மறதி, மறைமுக விமர்சனங்கள் வந்துப் போகும். ஆனால் உங்கள் வளர்ச்சி தடைபடாது. முயற்சிகள் வெற்றியடையும்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் சஷ்டம-பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்து கைக்கு வரும்.  
    
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். 
 
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, ஒருவித படபடப்பு, பதட்டம் வந்து நீங்கும். தன்னம்பிக்கை குறையும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளை கடக்கும் போதும் கவனம் தேவை. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.    
       
புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். முக்கிய சாலைக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது பொறுப்புகளை மூத்த அதிகாரிகள் உங்களை ஒப்படைப்பார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும். உங்களை உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். 
 
கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்றபடி நல்ல கணவர் அமைவார். முகப்பரு,தோலில் நமைச்சல் நீங்கும். தடைபட்ட கல்வியில் வெற்றியுண்டு. கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறும். ஏனோ தானோ என்று படிக்காமால் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு,பாராட்டு உண்டு. 
 
இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும். 
 
பரிகாரம்:
விருத்தாசலம் ஸ்ரீஆழத்து விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கண் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.