செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (17:25 IST)

தனுசு - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! உங்களுக்கு 9-வது ராசியில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். வழக்கு சாதகமாகும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.
 
உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மனோபலம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.
 
புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். ராசிக்குள்ளேயே சூரியனும், புதனும் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான குருபகவான் 10-ம் வீட்டில் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். இடைவிடாமல் உழைத்து கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்துப் போகும். முன்கோபம், டென்ஷனால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். மற்றவர்களை குறைக் கூறுவதில் எந்த பலனும் இல்லை.
 
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். தாயாருடன் மனத்தாங்கல் வந்துப் போகும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். சொத்து விற்கும் போதும் ஓரே தவணையாக பணத்தை கேட்டு வாங்கப் பாருங்கள். வீட்டில் வர்ணம் பூசுவது, விரிவுப்படுத்துவது, கழிவு நீர், குடி நீர் குழாய் அடைப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
 
அசிங்கப்பட்டுவிடுவோமோ, அவமானங்களை சந்திக்க நேரிடுமோ, யாரேனும் தன்னைப் பற்றி தவறாக சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பீர்கள். தாய்வழி சொந்தங்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும்.
 
ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
 
08.01.2016 முதல் ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் நுழைவதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு கட்ட, வாங்க, புதிதாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் தந்தையாருக்கு இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு வலி வந்துப் போகும். கை, கால் மரத்துப் போகும். பாகப்பிரிவினை பிரச்னையில் தலையிட வேண்டாம்.
 
வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கேது 3-வது வீட்டில் அமர்வதால் ஒரு ஞானத்தை கொடுப்பார். மன முதிர்ச்சியை தருவார்கள். வாழ்க்கையின் சூட்சுமத்தையும் உணர வைப்பார். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 
எதிர்பாராத பணவரவு உண்டு. வேற்றுமதம், பிற மொழி பேசுபவர், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். இளைய சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் வரும். விலை உயர்ந்த தங்க ஆபரணம், ரத்தினங்கள் வாங்குவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள் சிலர் கூடுதல் அறை அமைப்பீர்கள் அல்லது தளம் அமைப்பீர்கள்.
 
இந்த வருடம் முழுக்க சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரையச் சனியாக தொடர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். செலவுகளை சுருக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள். ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை கூட பல முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள்.
 
அந்தரங்க விஷயங்கள், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப் பாருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பழகுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. ஏறிக்கொண்டேப் போகும் கடன் வட்டியை நினைத்து குழம்புவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள்.
 
முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அவசர முடிவுகளெல்லாம் எடுத்து சிக்கிக் கொள்ளாதீர்கள். அலைப்பேசியில் பேசிக் கொண்டே சாலைகளை கடக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கூர்ந்து அவ்வப்போது புலம்புவீர்கள். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.
 
27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் மனக்குழப்பங்கள் வரும். பிள்ளைகளால் டென்ஷன், அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீக சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே செய்துவிட்டு செல்வது நல்லது. களவு போகக் கூடும்.
 
வியாபாரம் சூடுபிடிக்கும். அவ்வப்போது வரும் போட்டிகளால் விழிபிதுங்குவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டிஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கண்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் சில கோரிக்கைகளை முன் வைப்பார்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். புது முதலீடுகள் வேண்டாம்.
 
 
10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் நல்ல பெயரெடுத்து முன்னேறுவார்கள்.
 
சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்துப் போங்கள். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள சற்று தாமதமாகி கிடைக்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். அன்பாகவும், ஆறுதலாகவும் பேசுகிறார்கள் என்றெல்லாம் நம்பி ஏமாற வேண்டாம். திருமண முயற்சி பலிதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வரும். நண்பர்களுடன் சுற்றித்திரிவதை தவிர்க்கவும். ஏழரைச் சனி நடைபெறுவதால் நுழைவுத் தேர்விற்கு இப்போதிருந்தே தயராகுங்கள். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.
 
கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். யதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.
 
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
 
விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
இந்தப் புத்தாண்டு கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினாலும், மற்றொரு பக்கம் எதிலும் விவேகமாக செயல்பட்டு சாதிக்க வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்:
 
திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.