வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:39 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - துலாம்

உள்மனது சொல்வதை மட்டும் செய்யும் நீங்கள், தகுதியற்றவர்களை புகழமாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை பல விதமான பிரச்னைகளிலும் சிக்க வைத்தார் ராகு பகவான். எதையுமே நிதானமாக ஆர அமர யோசிக்க விடாமல் ஒரு பதட்டத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினார். வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறதே என்று அவ்வப்போது ஒரு வெறுப்பும், சலிப்பும் அடைந்தீர்களே! முகத்தில் ஒரு மலர்ச்சியே இல்லாமல் ஒரு நிமிடம் சிரித்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தை உண்டாக்கினார். ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்த விடுபடுவீர்கள். 
 
மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். சோர்ந்திருந்து களையிழந்த உங்கள் முகம் இனி மலரும். குடும்பத்தினராலும் ஒதுக்கப்பட்டீர்களே! இனி எல்லோருடனும் மனம் விட்டு பேசும் சூழ்நிலை உருவாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். 
 
வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் இனி அடுத்தடுத்து நடந்தேறும். மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். என்றாலும் விரைய ஸ்தானத்தில் ராகு அமர்வதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 
 
கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். ஆன்மிகவாதிகளின் ஆசிப் பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். 

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பணத்தட்டுப்பாடு, எதிலும் பிடிப்பற்றப்போக்கு, சிறுசிறு நெருப்புகள் காயங்கள் வந்துச் செல்லும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சகோதர வகையில் மனவருத்தம் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 
 
ஜுவனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய வேலைகளையும் முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்த அழைப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  
 
ராகுபகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், அரசால் நெருக்கடிகள், முன்கோபம், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். 
 
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைவாற்றல் கூடும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.  
 
கன்னிப் பெண்களே! தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். ஆரோக்யம் சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று புது வேலையில் அமருவீர்கள். பெற்றோர் பாசமாக நடந்துக் கொள்வார்கள். 
 
கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். மூத்த கலைஞர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புது வாய்ப்புகளும் வரும். 
 
வியாபாரிகளே! ஆர்வம் பிறக்கும். சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றி விட்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்துவீர்கள். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலை விட்டு விட்டு வேற்று தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. புதிய நண்பர்களால் வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உணவு, ஷேர், சிமெண்ட், கல்வி கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.  
 
உத்தியோகஸ்தர்களே! ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இடம் மாறுவார். புது அதிகாரி உங்கள் திறமையை சரியாகப் புரிந்துக் கொள்வார். 
 

கேதுவின் பலன்கள் :   
    
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு கணவன்-மனைவிக்குள் பிரிவையும், கருத்து மோதல்களையும், மனைவிக்கு மருத்துவச் செலவுகளையும் தந்தாரே! சில வேலைகளை போராடி முடிக்க வைத்ததுடன், மனஇறுக்கத்தையும் ஏற்படுத்திய கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் தடைகளெல்லாம் விலகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். 
 
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்குயின் உடல் நிலை சீராகும். 
 
பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்களிலிருந்து மீட்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். சொந்த ஊரில் இழந்த மதிப்பு, மரியாதைக் கூடும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் வருமானம் உயரும். பாகப் பிரிவினை சாதகமாக முடியும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
         
உங்கள் சுக-பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். மகளுக்கு திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனின் பொறுப்புணர்வு அதிகமாகும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  
 
கேதுபகவான் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். 
 
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வி. ஐ. பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகள் உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். 
 
பரிகாரம்
 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதரை தரிசித்து வாருங்கள். ஏழையின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.