1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:38 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - சிம்மம்

யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். உங்களுக்கு 21. 06. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், தன்னம்பிக்கையையும், சவால்களில் வெற்றியையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். ஓரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. 
 
கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக் கண்ணாடி அணியக் கூடும். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்துப் போகும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் முடிந்த வரை அநாவசியப் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொண்டு வம்பில் சிக்க வைப்பார்கள். எனவே இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. 
 
குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தால் முக்கிய ஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடும். சந்தோஷமாக ஓர் இடத்திற்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். 
 
வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவர்களை கொண்டுவர வேண்டும். அதைப் புரிந்துக் கொண்டு செயல்படப்பாருங்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் பாக்யாதிபதியும்-சுகாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். 
 
சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். திக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
 
உங்களின் விரையாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். தோலில் நமைச்சல், அலர்ஜி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வீட்டிலும் மின் கசிவு, கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  
 
ராகுபகவான் உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்ட தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பலனடைவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.  
 
மாணவர்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது விடைகளை எழுதிப் பாருங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம்.  
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது-. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு.  
 
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். புதிய இளைய கலைஞர்கள் மூலமாக வெற்றியடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பரிசு, பாராட்டுகள் உண்டு.  
 
  விவசாயிகளே! நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். பக்கத்து நிலக்காரரை அனுசரித்துப் போங்கள். தானிய வகைகள், மூலிகை வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். 
 
வியாபாரிகளே! சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். அவர்களை திருப்திபடுத்த முடியாமலும் போகும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு முழு ஒத்துழைப்பு தருவார்கள். பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சட்டத்திற்கு புறம்பான முயற்சிகளை தவிர்த்துவிடுவது நல்லது.   
 
உத்தியோகஸ்தர்களே! சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சில சமயங்களில் மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாக நினைப்பீர்கள். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகளும் வரும். 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தையாருக்கு ஆரோக்ய குறைவையும், சேமிப்புகளையும் கரைத்த கேது பகவான் இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். வங்கிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். 
 
பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும். தந்தைவழி சொத்திலிருந்த சிக்கல்களெல்லாம் விலகி உங்க கைக்கு வந்து சேரும். வழக்கால் இருந்த அச்சம் நீங்கும். ஆனால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஊடல் அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும் மனைவியை மரியாதைக் குறைவாக பேச வேண்டாம். சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய பயமும் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். 
 
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ, அசிங்கப்பட்டுவிடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைத்தூக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.   
  

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் அஷ்டம-தனாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். உறவினர்களில் ஒரு சிலர் உங்கள் நிலைமை புரியாமல் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 
 
பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். எதிர்பாராத உதவிகள் வி. ஐ. பிகளிடமிருந்து கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும்.  
 
உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் வீண் விமர்சனங்கள், மறைமுக எதிர்ப்புகள், கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவி உங்கள் குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். 
 
அவருக்கு கழுத்து எலும்பு தேய்மானம், மூட்டு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திருமணப் பேச்சு வார்த்தை தாமதமாகும்.  
 
கேதுபகவான் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர் இப்போது உங்கள் பக்கம் ஆதரவாக திரும்புவார்கள். தொழிலதிபர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும்.
 
 ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அவருக்கு நல்ல வாழ்க்கையும் துணை அமையும். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்டுவீர்கள். 
 
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். சக ஊழியர்களிடம் அன்பாகப் பேசுவதாக நினைத்து அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 
 
இந்த இராகு-கேது மாற்றம் குடும்பத்தில் விவாதங்களையும், மருத்துவச் செலவுகளையும் தந்தாலும் சுற்றுச் சூழலுக்குத் தகுந்தாற் போல் நடந்துக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் தருவதாக அமையும்.  
   
பரிகாரம்
 
நாகூர் தலத்தில் அருளும் நாகநாதரை தரிசித்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.