செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:34 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மிதுனம்

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். 21. 6. 2014 முதல் 08. 1. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு திசைக்கொரு பக்கமாக பிரச்சனைகளை கொடுத்து நாலாவிதத்திலும் பாடாய்படுத்தினார். உங்களை நிம்மதியில்லாமல் மனஉளைச்சலுக்கு ஆக்கினார். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவித்தீர்கள். இப்போது ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் இனி எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை தருவார். 
 
5-ம் வீட்டை விட்டு ராகு விலகியதால் பல முறை சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணமும், பொறுப்பற்ற போக்கும் மாறும். இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 
 
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு உங்களிடம் கருத்து மோதல்களுடன் இருந்து வந்த பழைய உறவினர்கள் இப்போது வலிய வந்துப் பேசுவார். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் அரசு அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். 
 
தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும். அவர் கோபப்பட்டு பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புதிதாக வரும் விளம்பரத்தை கண்டு ஏமாந்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். 
 
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால் வலி வந்து விலகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் சச்சரவு, வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வீண் சந்தேகம் வந்துச் செல்லும். புதுப் பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது. வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். 
 
தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் சுறுசுறுப்பாக செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிக்க அதிகம் உழைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும். பழுதான வாகனம் ஓடும். 
 
ராகுபகவான் உங்களின் சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலைக் கிடைக்கும். நிண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். புதிதாக கடன் வாங்கி அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். 
 
மாணவ-மாணவிகளே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். மற்றவர்களின் சிபாரிசின் பேரிலும், அதிகம் செலவு செய்தும் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர வேண்டி வரும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். 
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் தளர வேண்டாம்.               
 
வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ செய்யப்பாருங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். சம்பளத்தை தவிர அதிக சலுகைகள் தந்தும் நன்றி இல்லாமல் இருக்கிறார்களே! என்று ஆதங்கப்படுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். இரும்பு, கடல் உணவுகள், மூலிகை, கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். 
 
உத்தியோகஸ்தர்களே! சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை உயரதிகாரிகள் மத்தியில் பரப்புவார்கள். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கூட போராடி பெற வேண்டி வரும். 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து திடீர் யோகங்களையும், செல்வம், செல்வாக்கையும் தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமையால் பதட்டம், சோர்வு வந்துப் போகும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில், முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். 
 
உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் நீங்களும் மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும், வாக்குறுதியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்களோ அல்லது தலைக்குனிவான சம்பவங்களோ நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை விட்டிற்கு அழைத்து வர வேண்டாம். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். 
 
மற்றவர்களுக்காக இரக்கப்பட்டு ஏமாற வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தடைப்பட்டு தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும். 
 
எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வந்து சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள்.    
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அழகு, அறிவு, ஆரோக்யம் கூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.  
 
உங்கள் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு உங்களுடைய பெரிய பரிந்துரை செய்யப்படும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  
 
கேதுபகவான் ஜூவனாதிபதியும்-சப்தமாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வீண் விரையம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 
 
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.  
 
வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களை கவர விளம்பர யுக்திகளை கையாளுங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை காலத் தாமதமின்றி செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோக ஸ்தானத்தில் கேது அமர்வதால் விரும்பத்தகாத இடமாற்றங்கள், சின்ன சின்ன அவமானங்கள், வேலையிழப்புகள் வந்துப் போகும். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். சிலர் உங்களை அவதூறு வழக்குகளில் சிக்க வைப்பார்கள். 
 
இராகு-கேது மாற்றம் சேமிப்புகளை கரைப்பதுடன், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக இருக்கும். 
 
பரிகாரம்
 
நாகர்கோவில் தலத்தில் அருள்பாலிக்கும் நாகராஜாவை தரிசித்து விட்டு வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.