வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:28 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - மேஷம்

குடும்ப நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள், தன்னலம் இல்லாத தியாகியைப் போல் வாழ்பவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தியனாரே! திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே! தாழ்மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.
 
 வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். மனைவி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்யம் சீராகும். 
 
மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
 
 மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.  

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.  
 
சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 
 
ராகுபகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்புக் கூடும்.  
 
கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. 
 
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். 
 
வியாபாரிகளே! இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரரா£க அறிமுகமாவார். 
 
உத்தியோகஸ்தர்களே! உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். 
 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்துக் கொண்டு பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருக்கும் கேது ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 
 
உங்களின் பலவீனங்களையெல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாகப் பேசத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொள்வீர்கள்-. ஆன்மிக தளங்களுக்குச் சென்று வருவீர்கள். என்றாலும் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துப் போகும். 
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். 
 
பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி. ஐ. பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.           
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் மகோபலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், தோல்விமனப்பான்மை, வீண் பழி, முன்கோபம் வந்துச் செல்லும்.  
    
உங்கள் ஜீவனாதிபதியும்-லாபாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும்.   
 
கேதுபகவான் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். 
 
வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும் சுடுதல் நேரம் ஒதுக்கி பணிப்புரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். 
 
இந்த ராகு-கேது மாற்றம் அழகு, ஆரோக்யத்தையும், பணம், பதவியையும் தரும். 
 
பரிகாரம்
 
கும்பகோணம் நகரத்தின் மையத்திலுள்ள நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.