வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:43 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கும்பம்

நகைச்சுவையாகவும், நாசுக்காகவும் பேசும் நீங்கள், நல்லது செய்தே நலிந்தவர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு சேமிப்புகளை கரைத்ததுடன், உங்களுக்கு தந்தையாருக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்திய ராகு பகவான் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். 
 
ராகு எட்டில் மறைவதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். அவருடனான மோதல்களும் விலகும். பாகப்பிரிவினைப் பிரச்னை சுமூகமாக முடியும். என்றாலும் 8-ல் ராகு அமர்வதால் பயணங்கள் அதிகமாகும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 
 
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும். 
 
திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்துப் போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். 
 
கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். புது வேலைக் கிடைக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.    

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் அதிகமாகும். சொத்து வாங்கும் முன் தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரும். சகோதரங்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.   
  
சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் எதிர்ப்புகள், விமர்சனங்கள் அதிகமாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அரசாங்க அனுமதிப் பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். 
 
ராகுபகவான் உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்துக் கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். அவருக்கு அடிவயிற்றில் வலி, நெஞ்சு எரிச்சல், தலைச்சுற்றல் வந்துப் போகும். திருமண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். 
 
மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
 
கன்னிப்பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். 
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு. 
 
வியாபாரிகளே! பற்று வரவு சுமார் தான். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். 
 
அயல்நாட்டிலிருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். ரியல் எஸ்டேட், ரசாயனம், இரும்பு, எலக்ட்ரிக்கல்ஸ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போங்கள். 
 
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சில சூட்சுமங்களை அறிந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவுவார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. சம்பள பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.  
 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்கும் துணிச்சலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். குடம்பத்திலும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். 
 
வெளிவட்டாரத்திலும் யாரையும் விமர்சிக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. 
 
யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். தேடிக் கொண்டிருந்த தொலைந்துப் போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும்.                  
     
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் பூர்வபுண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புதிய யோசனைகள் மனதில் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். பயணங்களால் பலனடைவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.  
 
உங்கள் ராசிநாதனும்-விரையாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் அழகு, அறிவுக் கூடும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சொந்தமாக சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.    
     
கேதுபகவான் தனாதிபதியும்-லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வருமானம் உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாக பணம் வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. 
 
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி-வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். சில சலுகை திட்டங்களும் கிடைக்கும். நிறுவனத்தின் சார்ப்பாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சக ஊழியர்கள் மத்தியிலும் இணக்கமான சூழ்நிலை உருவாகும். 
 
இந்த ராகு கேது மாற்றம் செலவுகளையும், திடீர் பயணங்களையும் தருவதுடன் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேச வைப்பதாக அமையும். 
 
பரிகாரம்: 
 
நாகை மாவட்டம், பூம்புகாருக்கு அருகேயுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் தலத்தில் அருளும் கேது பகவானை தரிசித்து வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.