1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 19 ஜூன் 2014 (18:38 IST)

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - கன்னி

தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களை பாதுகாப்பவர்கள். உங்களுக்கு 21. 6. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். 
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு சாதாரணமாகப் பேசப் போய் சண்டையை ஏற்படுத்தினார். சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அடுத்தடுத்து செலவுகளை கொடுத்து விழி பிதுங்க வைத்தார். குடும்பத்திலும் அமைதியில்லாமல் அலைக்கழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். 
 
வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை கவனம் செலுத்துங்கள். 
 
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். உடம்பில் இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறையும். பச்சை கீரை, காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். 
 
இன்பெக்ஷன், அலர்ஜி, வயிற்று உப்புசம், வாய்ப்புண், ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 
 
உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். முக்கிய விஷயங்களையெல்லாம் மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம் தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
 
நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சிலர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும். 
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் 
 
உங்கள் திருதியாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, பயம், வீண் செலவுகள், முன்கோபம் வந்து விலகும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தரமுடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். 
 
  லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். 
 
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். மூத்த சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.  
 
 ராகுபகவான் உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் திடீர் பயணங்களால் செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். மனஉளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். அரசாங்க விஷயங்கள் அலைச்சலின் பேரில் முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர், கையழுத்திட வேண்டாம். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.      
   
மாணவ-மாணவிகளே! மந்தம், மறதியால் மதிப்பெண் குறையும். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். மொபைல் போனில் பேசுவது, டி. வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக நுழைய வாய்ப்பிருக்கிறது.  
     
கன்னிப் பெண்களே! கல்யாணம் தள்ளிப் போகும். காதல் விஷயத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். இன்பெக்ஷன், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். 
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்பிற்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.  
 
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும். போட்டிகள் அதிகமாகும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வியாபார பிரச்னைகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடாலாம் என்று முடிவெடுப்பீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் மூளும். மருந்து, கண்ஸ்ட்ரக்ஷன், கன்சல்டன்ஸி, கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். 
 
உத்தியோகஸ்தர்களே! பழைய பிரச்சனைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள். 
 
அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. பதவி உயர்வு, சம்பள உயர்வை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் தாமதமாகும். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். 

 
கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு பலவிதமான இன்னல்களையும், அவஸ்தைகளையும், கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி விபத்துகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். 
 
எந்த நேரம் என்னவாகுமோ என்ற அச்சமெல்லாம் விலகும். எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். ஆனால் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளெல்லாம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். 
 
ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். பிள்ளைகளின் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர்களால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ, நாம் மதிக்கப்படவில்லையோ என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கேள்விக் கேட்டு குழம்புவீர்கள். 
 
உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைப்பீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பை சரியாக பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் ராசிநாதனும்-தசமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங்கள் வரும். புது வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வழக்கு சாதகமாகும்.      
       
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
                                  
கேதுபகவான் சுக-சப்தமாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் வீண் விரையம், பண இழப்புகள், எதிலும் ஆர்வமின்மை, அசதி, சோர்வு வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். தாயாருக்கு வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, தைராய்டு பிரச்னை, கர்பப்பை வலி வந்து நீங்கும்.  
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். பழைய அனுபவமிக்க பங்குதாரர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுக் கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. 
 
இந்த இராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும், குடும்பத்தில் சலசலப்புகளையும் உண்டாக்கினாலும் ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம்
 
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பேரையூர் நாகநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.