1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவபெருமானுக்கு மட்டும் ஏன் நெற்றிக்கண் வந்தது தெரியுமா....?

பிரம்மர் உயிரைப் படைப்பதும், விஷ்ணு படைக்கப்பட்ட உயிரை காக்கவும் இருக்கும்போது அந்த உயிருக்கு முக்தி அளிக்கக்கூடிய இறப்பை வழங்கும் இறைவனாக விளங்குவது சிவபெருமான்.
சிவபெருமானின் கோபத்தை காட்சிபடுத்திப் பார்க்கும்போது நமக்கு தோன்றுவது அவரின் நெற்றிக்கண் என்று அறியப்படும் மூன்றாவது கண். இந்த நெற்றிக்கண் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று நமக்கு அறிந்து கொள்ளும் ஆவல் தானாகவே எழும். இந்து மதத்தின் எல்லா  நூல்களும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் ஒவ்வொரு கதையிலும் இந்த கண் பற்றிய ரகசியம்  வெவ்வேறாக உள்ளன.
 
இறைவன் சிவபெருமான் இந்த உலகத்தை அழிவிலிருந்து பல தடவை மீட்டுத் தந்துள்ளார். அவருடைய நெற்றிக்கண் திறக்கும் போதெல்லாம்  அது ஒரு சிக்கலான மற்றும் அவசர நேரங்களைக் குறிப்பதாக அறியப்படுகிறது. துன்பங்களுக்கு அழிவைக் கொடுக்கும் நேரமாகவும்  இருக்கிறது.
 
ஒருமுறை காமதேவன் சிவபெருமானை தியானத்தில் இருந்து கலைக்க முயற்சிக்கும்போது சிவபெருமான் கோபம் கொண்டு தன்  நெற்றிக்கண்ணை திறந்தார். அவரது நெற்றிக்கண் காமதேவனை அழித்ததாக நம்பப்படுகிறது. இதன்மூலம் சிவபெருமானின் நெற்றிக்கண்  நெருப்பாக உருவகப்படுத்தப்படுகிறது.
 
எந்த ஒரு பொருள் சார்ந்த உணர்வும் ஆன்மீக பாதையில் தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என்பது இதன் மூலம் அறியப்படுவதாகும்.
 
ஒரு முறை பார்வதி தேவியார் விளையாட்டுக்காக சிவபெருமானின் கண்களை மூடியதால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்ததாக ஒரு கதை  உண்டு. சிவபெருமானின் இரண்டு கண்கள் சூரியன் மற்றும் சந்திரன் என்று கூறப்படுகிறது. ஆகவே பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை  மூடியதும் இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆகவே பிரபஞ்சத்திற்கு ஒளியை வழங்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணை  திறந்ததாக கூறப்படுகிறது.
 
சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து பல ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பிறகு ஞான ஒளியைப் பெற்றார். இந்த மூன்றாவது கண் என்பது ஞானம் மற்றும் நீதியின் கண்ணாகும். அவருக்கு பின்னால் வரும் துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர்  விளங்குகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மூன்றாவது கண் உள்ளது, அதாவது ஒழுக்கநெறிக்கான வழிகாட்டுதல் தேவைப்படும் சமயத்தில்  அவர் விழிப்புடன் இருக்க அதனைப் பயன்படுத்த வேண்டும்.