1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சாஸ்தா அவதரித்ததின் புராணக் கதை...!

மனித குலத்தின் முதல்வர்களாக மனுவும், சத்ரூபையும் தோன்றினர். அவர்களுக்கு மகனாக பிறந்த காச்யப முனிவருக்கு திதி, அதிதி என இரு பத்தினிகள். அதிதிக்கு தேவர்களும், திதிக்கு அசுரர்களும் மக்களாய் பிறந்தனர்.

பிறப்பால் தேவர்களும், அசுரர்களும் சகோதரர்களே  என்றாலும்,  குணத்தால் வேறுபட்டு, பகைமை உணர்வுடன் எப்போதும் ஒருவரையொருவர் எதிர்த்து வந்தனர். மும்மூர்த்திகள் உதவியுடன்  அமராவதியை  கைப்பற்றிய தேவர்கள் அதை ஆண்டு வந்தனர்.  தலைவனாக இந்திரன் திகழ்ந்தான். 
 
துர்வாச மஹரிஷி இந்திரனைக்காண வருகிறார். வரும் போது பராசக்தியின் பிரஸாதமான மலர்மாலை ஒன்றை கொண்டு வருகிறார். அந்த மாலையை தன்னை வரவேற்ற இந்திரனிடம் அளித்தார். அவன் அந்த மாலையை பொருட்படுத்தாமல் தனது வெள்ளை யானையான  ஐராவதத்தின்  மத்தகத்தில் சூட்டினார். மாலையில் இருந்து வீசிய நறுமணத்தால் வண்டுகள் யானையின் தலையின் மேலே ரீங்காரமிட,  கோபமடைந்த ஐராவதம்,  அந்த மாலையை கீழே போட்டு காலால் மிதித்தது. அதைக்கண்டு துர்வாசர் கொதித்தெழுந்தார். 
 
“இந்திரா நான் கொடுத்த மாலையை நீ மதிக்க தவறிவிட்டாய், தேவர்கள் தங்கள் திவ்ய சக்திகளை இழந்து நரை, திரை, மூப்புக்கு  உள்ளாவீர்கள்.  ஐராவதமும் காட்டானை ஆகட்டும். ” என்று சபித்தார். ஐராவதம் காட்டானையாகி மதம் கொண்டு திரிய துவங்கியது.  தேவர்கள் அழகு இழந்து, நரை  விழுந்து, முதுமை கொண்டனர். இதுதான் தக்க தருணம் என்று மலகன் எனும் அரக்க மன்னன் தலைமையில்  அசுரர்கள், தேவர்களை எதிர்த்து  போரிட்டனர். சக்தியிழந்த தேவர்கள் தோற்றோட, அசுரர்கள் அமராவதியை கைப்பற்றினர். 
 
இதையடுத்து தேவர்கள் மும்மூர்த்திகளை பணிந்தனர். தேவர்களிடம், நீங்கள் இழந்த சுபிட்சத்தை அடைய, பல அற்புத மூலிகைகளை பாற்கடலில்  இட்டு கடையுங்கள். திருப்பாற்கடலை கடைந்தால் அம்ருதம் கிட்டும். அதை அருந்தினால் உங்களுக்கு நிகரற்ற வலிமையும்,  மரணமற்ற வாழ்வும்  திவ்யத்துவத்தையும் நிலை பெறச்செய்யும் என்று வழி கூறினார் வாசுதேவன். ஏற்கனவே சக்தியனைத்தையும் இழந்து  முதுமை பெற்றிருக்கும்  தேவர்களால் அது எப்படி முடியும். அதனால் தயக்கம் காட்டினர். பரந்தாமன் அதற்கும் வழி கூறினார். 
 
“மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடையுங்கள்” என்றார்.  பாற்கடலை  கடைந்தபோது இறுதியாக பகவான் கிருஷ்ணன் தன்வந்தரி வடிவத்தில் கைகளில் அம்ருத கலசத்தினை ஏந்தி தோன்றினார்.  அசுரர்கள் அம்ருதத்தை அவரிடமிருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டனர். இருவர் செய்த உழைப்பின் கூலியை ஒருவர் மட்டுமே  எடுப்பதை, அதுவும் பலவந்தமாக  அபகரித்ததை பகவானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
அம்ருதத்தில் ஒரு துளி கூட அசுரர்கள் இனி அருந்த கூடாது என்றெண்ணி, பரமேஸ்வரியை நினைத்து தியானித்தார். பின்னர் அற்புதமான  பேரழகுடன் மோஹினி வடிவெடுத்து தோன்றினார். அசுரர்கள் முன் நின்றார். அப்போது அம்ருதத்திற்காக அசுரர்களும், தேவர்களும்  ஒருவரையொருவர்  அடித்துக்கொண்டிருந்தனர். மோஹி-னி பேசினாள் “எதற்கு சண்டை, வரிசையில் அமருங்கள் நானே பங்கிட்டு தருகிறேன்.” என்று கூறி அம்ருதத்தை  தேவர்களுக்கு முதலில் வழங்கினார். அதை உண்ட தேவர்கள் இழந்த இளமையையும்,  சுயரூபத்தையும் கொண்டதோடு தேக வலிமையும், மரணமில்லா வாழ்க்கையையும் பெற்றனர். 
 
அம்ருதம் உண்ட தேவர்கள், அசுரர்களை வென்று மீண்டும் தேவேந்திரன் மூவுலகையும் ஆட்சி புரியலானான். அசுரர்கள் பாதாள உலகில்  வாழலாயினர்.  நடந்தவைகளை நாரதர், பரமேஸ்வரனிடம் கூறினார். அடுத்து ஈசன் உமா தேவியுடன் பரந்தாமனை காண பாற்கடல் வந்தார். அகிலத்தையே மயக்கிய  மோஹினி அவதாரத்தை எனக்கு காட்ட வேண்டும் என்றார். அடுத்திருந்து நந்தவனத்தில் ஈசனிடம், பரந்தாமன் தான் எடுத்த மோஹினி அவதாரத்தை காட்டினார். மோஹினியை கண்ட ஈசன், அவளிடம் நெருங்க, அரியும், அரனும் சங்கமமாகினர். அரிஹர  சக்தியும் ஒருங்கே பெற்று மஹா சாஸ்தா  அவதரித்தார்.