1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (13:34 IST)

ஜய வருட ராசி பலன்கள் - ரிஷபம்

மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் ஆதரவு கிட்டும். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித்தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு திருமணமும் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் சாதகமாக முடியும். உங்களை மறந்துபோன தூரத்து உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். சொந்த ஊரிலுள்ள பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.
  
ஜூன் 12ந் தேதி வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள், திட்டங்கள் தாமதமாகி முடியும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்க வேண்டியது வரும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். 
 
ஜூன் 20ந் தேதி வரை ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் சின்னச் சின்ன கனவுகள் நனவாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12ல் மறைந்து நிற்பதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகளை கண்டறிவீர்கள்.

சில நாட்கள் தூக்கம் குறையும். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது 21ந் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோயில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 
 

ஆவணி, தை, மாசி, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, வாகனம் வாங்கும் யோகம், புதியவரின் நட்பெல்லாம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஐப்பசி மாதம் உங்கள் ராசிநாதனான சுக்கிரனும், சுகாதிபதியான சூரியனும் வலுவிழந்து காணப்படுவதால் தொண்டைப் புகைச்சல், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, முன்கோபம், குடும்பத்தில் சலசலப்பு, வாகனப் பழுது வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் மனக்கசப்பு வந்து விலகும். 
 
டிசம்பர் 15 வரை உங்களின் யோகாதிபதியான சனி பகவான் 6ம் வீட்டில் நிற்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். 
 
டிசம்பர் 16ந் தேதி முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் எதிலும் ஆர்வமின்மை, தாழ்வுமனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டியது வரும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். வீண் சந்தேகத்தாலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். மனைவிக்கு சிறுசிறு விபத்துகள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். யாருக்காகவும் யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். மனைவி வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். 
 
ஆனி, ஆடி மாதங்களில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகளை கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். துரித உணவகம், மர வகைகள், வாகன உதிரி பாகங்கள், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள். பழைய பங்குதாரருடன் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். 

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இதுவரை உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிக்கும் இருந்த தவறான புரிதல் விலகும். மூன்றாவது நபர் தலையீட்டால் இதுவரை இருந்த மெல்லிய பகையெல்லாம் அகலும். உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 3ல் மறைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.

பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யுங்கள். உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதியான சனிபகவான் டிசம்பர் 16 முதல் 7ல் அமர்வதால் அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். அப்படி வந்தாலும் கூட நன்மையில்தான் முடியும். மேலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் பழைய விஷயங்களை கிளறி உங்கள் மீது வழக்கு தொடர்வார்கள். ஒன்றும் பயப்படாதீர்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் கிடைத்து விடும். 
 
கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.
 
கன்னிப்பெண்களே! நேர்முகத் தேர்வில் வெற்றிப்பெற்று புது வேலையில் சேருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அவ்வப்போது அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். பெற்றோர் ஆதரிப்பார்கள். 
இந்த ஜய வருடம் உங்கள் திறமையை சோதிப்பதாக இருந்தாலும், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றி பெற வைக்கும்.
 
பரிகாரம் :  கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை தரிசியுங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்.