1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:31 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்!

வாதாடும் குணம் கொண்ட நீங்கள், இயற்கையை அதிகம் நேசிப்பீர்கள். மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்துக் கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9-ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். 
 
'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். வளைந்துக் கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள். 
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். தள்ளிப் போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைக் கட்டும். அறிவுப் பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள். 
 
கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கிருந்த கூடாநட்பு விலகும். அவருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். 
 
குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் எப்போதும் ஏதோவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமைக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். 

இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமூகமாகும்.      
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் தன-பூர்வபுண்யாதிபதியான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.     
       
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் சேவகாதிபதியும்-சுகாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமையால் பதட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் கழிவு நீர் குழாய், குடி நீர் குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது. தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். அவருடன் ஆரோக்யமான விவாதங்களும் வந்துப் போகும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.     
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை அஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்துச் செல்லும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.  
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.     
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். 
   
வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியை கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.
 
உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடி மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார். 
  
கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகுக் கூடும். உத்தியோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். 
 
 மாணவ-மாணவிகளே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். 
 
கலைத்துறையினரே! திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே! இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும். புகழ் பெற்ற பழைய கலைஞர்களால் சில உதவிகள் கிடைக்கும். 
 
இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும். 
 
பரிகாரம்
 
திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அமாவாசை திதி நாளில் வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.