வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:35 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்!

வேதாந்தம், சித்தாந்தம் பேசி மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள், தன் விஷயத்தில் தடுமாறுவீர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுகவீடான 4-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரையத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களை புதிய பாதையில் பயணிக்க வைப்பார். 
 
உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுப்பட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வீடு கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்த ஒதுக்கித் தள்ளுவீர்கள். 
 
வீண் சந்தேகத்தாலும், சச்சரவுகளாலும் பேசாமல் இருந்த கணவன்-மனைவிக்குள் இனி அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். 
 
பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வாடகைக் கொடுத்தே சம்பள மொத்தமும் அழிகிறதே என்று அவ்வப்போது ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! இனி சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். 
 
பிள்ளைகளின் பிடிவாதம் குணம் தளரும். உங்கள் அறிவுரையை இனி ஏற்றுக் கொள்வார்கள். பகுலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை விலகும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். 

வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போன வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம், கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், அறியாமல் செய்த தவறுகளெல்லாம் மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்த உறவினர்களின் மனசு மாறும். 
 
குரு உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். கோவில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஷேர் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலைக் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் லாபாதிபதியும்-விரையாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள்.     
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்களின் சுகாதிபதியும்-சப்தமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும்.        
  

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். 
 
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. அசல் வந்தால் போதும் என்று நினைத்திருந்த உங்களுக்கு கணிசமாக ஆதாயமுண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக் கேற்ப கடையை விரிவுப் படுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார்.
 
உத்தியோகத்தில் உங்களை எதிரியை போல பார்த்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புது மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். சக ஊழியர்களை திருத்துவீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தோஷங்களால் தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நட்பு விலகும்.  
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். 
 
கலைத்துறையினரே! புகழடைவீர்கள். அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய இருந்த படம் ரிலீசாகும். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.  
 
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும். 
 
பரிகாரம்
 
நாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநரசிம்மரையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் பௌர்ணமி திதி நாளில் வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள்.