வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:32 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு!

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களை சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தை தருவார். 
 
பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பாருங்கள். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு எதிராக முடிய வாய்ப்பிருக்கிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறிவீர்கள். 
 
ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். என்றாலும் புதிதாக சிக்கல்கள் ஏதுவும் வருமோ என்ற அச்சமும் மனதில் அடிக்கடி வந்துப் போகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். 
 
ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகமாகிக் கொண்டேப் போகும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். 
 
வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் அவ்வப்போது வந்து நீங்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்ல தல்ல. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். 
 
அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்துவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே செய்துவிட்டு செல்வது நல்லது. களவு போகக் கூடும். திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும்.  

குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். 
 
தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தி தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.    
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். திருமண, விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவுப் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் தனாதிபதியும்-சேவகாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. வேற்றுமொழிப் பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.   
 

28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை சப்தமாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், தாழ்வுமனப்பான்மை, எதிலும் நாட்டமின்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை, காய்ச்சல், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். புதிதாக அறிமுகமாகுபவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும். தந்தையார் உறுதுணையாக இருப்பார். அவரின் உடல் நிலையும் சீராகும். 
 
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு நட்டங்கள் வந்துப் போகும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்துக் கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும்.  
 
உத்தியோகத்தில் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். 
 
கன்னிப் பெண்களே! சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். விளையாடும் போது காலில் அடிப்படக்கூடும். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகங்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிக்க வைப்பார்கள்.  
 
கலைத்துறையினரே! போராடி சின்ன சின்ன வாய்ப்புகளை பெற வேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்கள்.  
 
இந்த குரு பெயர்ச்சி சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும். 
 
பரிகாரம்
 
திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.