வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 26 டிசம்பர் 2015 (16:07 IST)

மிதுனம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்
 
இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய ராகுபகவான் இப்போது ராசிக்கு தைரிய ஸ்தானமான 3-ல் வந்தமர்வதால் இனி கம்பீரமாகப் பேசி தடைப்பட்ட காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். மனோபலம் கூடும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நிரந்தர வருமானத்திற்கான வழி வகை கிடைக்கும். மனஇறுக்கங்கள் நீங்கும்.
 
தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சின்ன சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். தாயாரின் நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். தைரியமாக சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதிதாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொந்த பந்தங்கள்ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். இளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கௌரவப் பதவி, புது பொறுப்புகளுக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள்.
 
ராகுபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் பணவரவு உண்டு. குழந்தை பாக்யம் உண்டாகும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மொஷின் போன்ற மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் சுபச் செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். தூக்கமின்மை வந்துச் செல்லும்.
 
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். சிலரின் துரோகங்களை நினைத்து வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அசைப்போட்டுக் கொண்டிருக்காதீர்கள். நெஞ்சு எரிச்சல், கால் வீக்கம் வந்துச் செல்லும்.
 
கன்னிப் பெண்களே! உற்சாகமடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணை அமையும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி திருமணம் முடியும். பெற்றோர்கள் உங்களுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.
 
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்ல மாணவர்களின் நட்பு கிடைக்கும். அன்னிய மொழியும் கற்றுக் கொள்வீர்கள். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி பெறவும் நல்ல வாய்ப்பு வரும். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று பரிசு, பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டாகும்.
 
அரசியல்வாதிகளே! தேர்தலில் வெற்றி உண்டு. எதிர்கட்சிக்காரர்களை நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் தாக்கிப் பேசி பொது மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
 
விவசாயிகளே! ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட முயற்சி செய்யுங்கள். சிலர் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள்.
 
வியாபாரத்தில் நீங்கள் போடும் கணக்குத் தப்பாது. பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் வரும் பழைய பாக்கிகளும் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். உங்களுடன் பங்குதாரர்களாக பலரும் முயற்சி செய்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது.
 
கல்வித் தகுதியில் சிறந்த அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான சாலைக்கு மாற்றுவீர்கள்.
 
உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அலுவலகத்தில் புதிய முடிவுகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்களுடைய பங்கு அதிகமாக இருக்கும். உங்களைப் பற்றி தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து வேலைச்சுமையையும், மரியாதைக் குறைவான சம்பவங்களால் தலைக்குனிவையும், உத்யோகத்தில் நிம்மதியற்றப் போக்கையும் தந்துக் கொண்டிருந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள்.
 
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் நிறைவேற்றிவிடுவீர்கள். உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.
 
ஆனால் தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப் பிடிப்பு, எலும்புத் தோய்வு வந்துச் செல்லும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும்.
 
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். உங்கள் அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் மனைவி உங்களுடைய குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். வி.ஐ.பிகளின் அறிமுகம் உண்டு. வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள்.
 
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். பால்ய நண்பர்களுடன் பகைமை வந்துச் செல்லும். யூரினரி இன்பெக்ஷன், தொண்டை புகைச்சல், தலைச்சுற்றல் வந்துச் செல்லும்.
 
உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும் என்றாலும் எதிர்ப்புகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். ஏறிக் கொண்டேப் போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சின்ன சின்ன நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும்.
 
வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். அரசாங்கத்தால் கெடுபிடிகள் வந்துச் செல்லும். பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள்.
 
இந்த ராகு-கேது மாற்றம் தடுமாறிக் கொண்டிருந்த உங்களை கரைத்தேற்றுவதுடன் புதிய பாதையில் சென்று பயணிக்க வைப்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்
 
தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மனை ஏதேனும் ஒரு வெள்ளிக் கிழமை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்க்கை துணையை இழந்தவர்களுக்கு உதவுங்கள்.