வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By க.ப.வித்யாதரன்
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2016 (19:16 IST)

துர்முகி வருடப் பொதுப் பலன்கள் 2016

மன்மத வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான துர்முகி வருடம் பிறக்கிறது. 13.04.2016 புதன் கிழமை மாலை மணி 6.30க்கு சுக்ல பட்சம் சந்தான சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரம் 4ஆம் பாதம் மிதுன ராசி, துலாம் லக்னம் 3ஆம் பாதத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மீனம் ராசியில், அதிகண்டம் நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், சித்தயோகம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த நன்னாளில், ராகு மகா தசையில், சந்திரன் புக்தி, குரு அந்தரத்தில், சந்திரன் ஹோரையில் துர்முகி வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.
 
துர்முகி வருட வெண்பா:
 
"மிக்கான துர்முகியில் வேளாண்மை யேறுமே
  தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்"
 
என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின் படி இந்த வருடம் உலகெங்கும் மழைப் பொழிவு அதிகரிக்கும். மண் வளம் மிகுந்து விவசாயம் தழைத்து மகசூல் பெருகும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.
 
துர்முகி வருடத்தின் ராஜாவாக சுக்கிரன் வருவதால் சுக்கிரனின் ராசிகளான ரிஷபம், துலாம் மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புகழடைவார்கள். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். ரோஸ், பிங்க், நிறங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.
 
சுக்ரன் மழைக் கோள் என்பதால் அதிகம் மழைப் பொழியும். பசுக்கள், பால், நெல் உற்பத்தி அதிகமாகும். காம, போக இச்சை அதிகரிக்கும். நகை, வாகனம், வீடு வாங்குவோர் எண்ணிக்கையும் கூடும். வழிபாட்டுத் தலங்கள் கம்ப்யூட்டர் மயமாகும். அதிநவீன வசதிகள் கொண்ட வியாபார மையங்கள், குடியிருப்புக் கட்டிடங்கள் அதிகரிக்கும். லாட்ஜிங், சுற்றுலாத் துறை வளரும்.
 
மந்திரியாக புதன் வருவதால் மாணவர்களின் பாடச்சுமை குறையும். இந்தியக் கல்வி உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும். சில பாடங்கள் நீக்கப்பட்டு இன்றைய காலச் சூழலுக்கேற்ற விஷயங்கள் பாடத் திட்டத்தில் இடம் பிடிக்கும். ஆடிட்டிங், வங்கித் துறை, மார்க்கெட்டிங் துறை சூடு பிடிக்கும். பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். வைணவம் தழைக்கும். யோகா, தியானம் செய்வோர் எண்ணிக்கை கூடும். மாணவர்கள் கணினியில் தேர்வு எழுதும் முறை அறிமுகமாகும். பத்திரிக்கையாளர்கள், மீடியாக்கள் கை ஓங்கும். அர்க்காதிபதியாகவும் புதன் வருவதால் பொன், கல், நகை, வெள்ளி, பித்தளை, ஈயம், அலுமினியம், சிமெண்ட், டைல்ஸ் ஆகியவற்றின் விலை சற்றே உயரும். அழகு சாதனங்கள், க்ரீம்களின் விலை உயரும்.
 
மேகாதிபதியாகவும் புதன் வருவதால் புயல் காற்றும், புழுதிக் காற்றும் அதிகம் வீசும். சில்வர் கிரே, வெளிர் நீல நிற மேக உற்பத்தியால் கூடுதல் மழை கிடைக்கும். பனி அதிகரிக்கும். உலகெங்கும் வடக்கு, வட கிழக்குப் பகுதிகள் பனியால் பாதிப்படையும். மலைப் பிரதேங்களில் மண் சரிவு அதிகமாகும். மிளகு, ஏலக்காய் உற்பத்தி பெருகும். பச்சை நிற பருப்பு, தானியங்கள் அதிகம் விளையும். எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். நதிகள், அருவிகளில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும். சஸ்யாதிபதியாக சனி வருவதால் கன ரக வாகன உற்பத்தி அதிகமாகும்.
 
துறைமுகங்களில் கடத்தல் பெருகும். வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். ரயில்வே துறை, நீதித் துறை நவீனமாகும். பணத்தட்டுப்பாடு குறையும். எள், உளுந்து உள்ளிட்ட கருப்பு நிற தானியங்கள் செழிக்கும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். பெட்ரோல், டீசல் விலை குறையும். நிலக்கரி சுரங்கங்கள் பாதிப்படையும். சேனாதிபதியாக புதன் வருவதால் ராணுவத்துறையில் காலாவதியான போர்தளவாடங்கள் அழிக்கப்பட்டு அதிநவீன சாதனங்கள், பீரங்கிககள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள் சேர்க்கப்படும். ராணுவ அதிகாரிகள் மாற்றப்படுவர். எல்லைப் பகுதியில் அடிக்கடி போர் நிகழும். நாட்டின் ராணு ரகசியங்கள், பாதுகாப்பு விஷயங்கள் மேம்படுத்தப்படும்.
 
ரசாதிபதியாக சந்திரன் வருவதால் வெல்லம், நெய், சர்க்கரை, பால், தயிர், இனிப்பு வகை, இரும்பு, வாசனை திரவியங்கள் விலை உயரும். தான்யாதிபதியாக சுக்ரன் வருவதால் காய், கனிகளின் விளைச்சல் பெருகும். விலை குறையும். வெள்ளை, சிவப்பு நிற தானியங்கள் அதிகம் விளையும். அரிசி உற்பத்திக் கூடும். நீரஸாதிபதியாக சனி வருவதால் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க புது சட்டம் வரும். மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்படும். அரசின் உதவித் தொகையும் அதிகரிக்கும்.
 
18.09.2016 வரை சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கும். தேர்தலில் தனிப் பெரும்பான்மை அரிதாகும். கூட்டாட்சி அமையும். மழை, வெள்ளம், நில நடுக்கம் அதிகமாகும். இன, மதக்கலவரங்கள் அன்னிய சக்திகளால் தூண்டப்படும்.
 
துர்முகி வருடத்தின் மகர சங்கராந்தி தேவதை ராட்சஸம் என்ற பெயருடன் ஆண் யானை வாகனம் ஏறி வருவதால் சாலை விபத்துகள் அதிகரிக்கும். வதந்திகள் பரவும். கருப்புப் பணம், பதுக்கல் பணம் அரசால் கண்டறியப்படும். ஊழல் குற்றச் சாட்டுகள் அதிகமாகும்.
 
துர்முகி வருடம் மக்கள் மனதில் உற்சாகத்தையும், நாட்டில் பணப்புழக்கத்தையும், வியாபார அபிவிருத்தியையும் தருவதாக அமையும்.